Showing posts with label என் அய்வு. Show all posts
Showing posts with label என் அய்வு. Show all posts

14 August, 2022

வெண்பாவினால் சீரமைந்த குலோத்துங்கன் காலக் கல்வெட்டு

 சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை தமிழில் எல்லாமே செய்யுள்தான். மழலையர்களுக்கான அரிச்சுவடி முதல் சூரிய மண்டலத்தின் சூக்குமங்கள்வரை எல்லாமே பாடல்களாகவே சொல்லப்பட்டிருக்கின்றன!

இதற்குப் பல காரணங்கள் உள: சுருக்கம், மனத்தில் நிறுத்திக்கொள்வது எளிது, பிழைகள் மலியாது...

குறிப்பாக வெண்பாவின் இலக்கணம் மிகுந்த கட்டுக்கோப்புடையது, எனவேதான் இது போல செய்திகளைப் பட்டியலிடவோ பதியவோ பொதியவோ (enlist, embed, or encrypt) அது மிக உகந்த வடிவமாக இருந்துள்ளது (இருக்கிறது!).

ஒரு வெண்பா பாடலை ஒன்றிரண்டு முறை காதால் கேட்டவுடன் மனத்தில் பதிந்துகொண்டுவிட வேண்டும் என்கிறார் ஔவையார்:

’வெண்பா இருகாலில் கல்லானை...’ -கொன்றை வேந்தன்

இரண்டுமுறை கேட்டும் ஒருவர் மனத்தில் அவ்வெண்பா பதியவில்லை என்றால் அவர் பிறந்ததே வீண் என்று சற்று அழுத்தமாகவே சொல்கிறார் அவர்!

எதுகை, மோனை, கட்டுப்பாடான சீர், தளை, அடி அமைப்புகள் இவற்றின் காரணமாக வெண்பாக்களை மனத்தில் நிறுத்திக்கொள்வது எளிதாகிறது. 

திருக்குறளும், பெரும்பான்மையான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் வெண்பாவில்தான் அமைந்துள்ளன. எட்டுத்தொகை நூல்கள் எவை, பத்துப்பாட்டு நூல்கள் எவை முதலிய பட்டியல்களையும் வெண்பாவிலேயே காண்கிறோம். இலக்கணம் முதல் சிற்பம், நாட்டியம், அணி, கட்டடத் தொழில்நுட்பம் போன்றவற்றோடு நளவெண்பா போன்ற காப்பியங்கள்வரை வெண்பாவில் அமைக்கப்பட்டுள்ளன!

காலவோட்டத்தில் ஒன்றிரண்டு இடங்களில் எழுத்தோ சீரோ அழிந்தாலும் பிறழ்ந்தாலும் வெண்பாவின் அமைப்பைக் கொண்டு அவற்றை மீட்டுருவாக்கம் செய்துவிடலாம், அப்படி ஒரு மீட்டுருவாக்கத்தைப் பற்றித்தான் இங்கே உங்களுக்குச் சொல்ல விழைகிறேன்!

திரு. பாலமுருகனும் பிறரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் என்ற பகுதியில் ஏரிக்கரைப் பாறையில் இரண்டு கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர். (ஆவணம் 31, தொல்லியல் கழகம், 2022)

குலோத்துங்க சோழனின் 17வது ஆட்சியாண்டை (பொ.ஆ. 1195) சேர்ந்த அக்கல்வெட்டுகளைப் படிக்கக் கல்வெட்டறிஞர் முனைவர் சு. இராசகோபால் அவர்கள் உதவியுள்ளார். அவற்றுள் இரண்டாவது கல்வெட்டு ஒரு செய்யுளாக இருக்கலாம் என்று எண்ணிய அவர் அதனைச் சோதிக்குமாறு என்னைப் பணித்தார். 

நான் அது வெண்பாதான் என்று உறுதி செய்து, வெண்பாவிற்கு ஏற்ப அக்கல்வெட்டு வாசகத்தை அமைத்துக்கொடுத்தேன். அவ்வாறு அமைக்கும்போது முன்னர் படிக்கப்பட்டிருந்ததை அடியோடு சில இடங்களில் மாற்ற வேண்டியிருந்தது, பாடலையும் ஓரளவு முழுமைப்படுத்தி அமைத்தோம். இருந்தும் சில இடங்களில் பொருள் முழுமையாக அமையவில்லை / புரியவில்லை! ஆனாலும் இது ஒரு சுவாரசியமான வேலையாக இருந்தது!


முதல் வாசிப்பு:

        1.தொல் நிகழ் நரசிங்கப் புத்-
        2.த்தேரி சிலாகரு மரபிற்
        3.செய்தமைத்தான் கோ-
        4.ல் நெடுவரைமான் பாத தொ
        5.மலையன் மலர் மடந்
        6.தை கோமான் பழுவையர்க்
        7.கோன்

’தொல்நிகழ் நரசிங்கப் புத்தேரி சிலா கருமரபிற் செய்தமைத்தான் கோல் நெடுவரைமான் பாத தொமலையன் மலர் மடந்தை கோமான் பழுவையர்க் கோன்’

’செய்தமைத்தான்’ என்பதனால் இக்கல்வெட்டு ஒருவர் செய்த திருப்பணியைப் பற்றியது என்பது தெளிவு. ‘பழுவையர்க் கோன்’ என்று அவர் பெயர் ஈற்றில் குறிப்பிடப்படுகிறது (இத்தோடு உள்ள மற்றொரு கல்வெட்டில் இவரின் பெயர் ‘புழுவுடையானான மன்மலையன்’ என்று உள்ளது! ‘பழுவையர்’ என்பது திரிந்து புழுவுடையான் ஆகிவிட்டது!).

ஈற்றில் உள்ள ‘மலர்மடந்தை கோமான் பழுவையர்க் கோன்’ என்பது தெளிவாக வெண்டளையில் அமைந்திருக்கிறது, ‘கோன்’ என்ற ஈற்றசை ‘நாள்’ என்ற வாய்ப்பாட்டில் உள்ளது. இதை வைத்துக்கொண்டு நான் பாடலைப் பின்னாலிருந்து அமைக்க முயன்றேன்:

’கோமான் பழுவையர்க் கோன்’ என்பது ஈற்றடி, மோனையும் தளையும் சரியாக உள்ளன.

இதற்கு முந்தய அடி என்ன? வாசிப்பிலிருந்து அமைத்துப் பார்த்தால்,

’நெடுவரைமான் பாத தொமலையன் மலர்மடந்தை
கோமான் பழுவையர்க் கோன்’

-எதுகை அமையவில்லை (நெடு-கோமான்), ‘தொமலையன் - மலர்மடைந்தை’ என்னுமிடத்தில் தளைதட்டுகிறது (கலித்தளை வருகிறது!)

நான் மேற்கொண்டு இவ்வடியைச் சீர்செய்யும் முன் முழுப்பாடலையும் அமைத்துக்கொண்டு சீர்களையும் எதுகை மோனைகளைக் கொஞ்சம் பார்ப்போம் என்று கருதினேன், எனவே,

தொல்நிகழ் நரசிங்கப் புத்தேரி சிலா
கருமரபிற் செய்தமைத்தான் கோல்
நெடுவரைமான் பாத தொமலையன் மலர்மடந்தை
கோமான் பழுவையர்க் கோன்

என்று வைத்துக்கொண்டு தொடங்கினேன். ‘இது வெண்பாதானா? எதேச்சையாக ஈற்றடி மட்டும் அமைந்துவிட்டதோ?’ என்ற ஐயம் எழுந்தது! ஆனால், ‘சிலா’ ‘செய்த’ என்ற மோனைகள் கொஞ்சம் ஒளியூட்டின, எனவே,

தொல்நிகழ் நரசிங்கப் புத்தேரி
சிலா கருமரபிற் செய்தமைத்தான் கோல்
நெடுவரைமான் பாத தொமலையன் மலர்மடந்தை
கோமான் பழுவையர்க் கோன்

என்று மாற்றிக்கொண்டேன், இப்போது இரண்டாமடியும் வெண்பா அமைப்பில் கொஞ்சம் வருகிறது, ஆனால், முதற்சீர் ஓரசையாக இருக்கிறது, எனவே அதனை ‘சீல’ என்று அமைத்தேன். கல்வெட்டுகளில் மெய்களுக்குப் புள்ளி இருக்காது, குறில் நெடில்களுக்கான கொம்புகளும் ஒன்றாகவே இருக்கும். எனவே, ‘சி’ என்பதைச் ‘சீ’ என்றும் படிக்கலாம். இந்நோக்கில் பார்த்தபோது, ‘சிலா’ என்று படிக்கப்பட்டிருந்தது ‘சீலந்’ என்றும் இருக்கலாம் என்று தோன்றியது (கல்வெட்டைப் பார்த்தபோது லகரத்தின் துணைக்கால் நகரமாகவும் இருக்கலாம் என்று அறிந்தேன்!)

‘சீலந் கருமரபிற் செய்தமைத்தான்’ என்றால் வெண்பா அடி நன்றாக அமைகிறது! மேலும், ‘சீலம்’ என்பது ‘சீலந்’ என்று எழுதப் பட்டிருப்பதால், அடுத்துள்ள சொல் தகரத்தில்தான் தொடங்க வேண்டும் என்ற துப்பும் கிடைத்தது, எனவே,

‘சீலந் தருமரபிற் செய்தமைத்தான்’ என்று அமைத்தேன், இந்த வாசிப்பு பொருத்தமானதாகத் தோன்றியது!

‘சிலா கருமரபிற் செய்தமைத்தான்’ என்ற வாசிப்பிற்கு ‘கருங்கல் பணிசெய்த’ என்று பொருள் கொண்டிருந்தனர் (சிலா - கல்; ஏரிக்கரைக்கு கருங்கல்லால் படித்துறை போன்றவை செய்திருக்கலாம் என்று ஊகித்திருந்தனர்!), ஆனால், ‘சீலந் தருமரபிற் செய்தமைத்தான்’ என்றால் ‘புகழ் (சீலம்) மிக்க மரபில் வந்தவன் செய்தான்’ என்ற பொருள் வருகிறது.

இப்போது,

தொல்நிகழ் நரசிங்கப் புத்தேரி
சீலந் தருமரபிற் செய்தமைத்தான் கோல்
நெடுவரைமான் பாத தொமலையன் மலர்மடந்தை
கோமான் பழுவையர்க் கோன்

என்று நிற்கிறது. ’சீலம்’ என்பதோடு எதுகை அமைய 2ம் அடியின் ஈற்றுச்சீர் ‘கோல’ என்று இருக்க வேண்டும், (மெய்களுக்குப் புள்ளி காட்டப்பட்டிருக்காதே) எனவே, ‘கோல்’ என்பதைக் ‘கோல’ என்று மாற்றிக்கொண்டேன், நேரிசை வெண்பாவுக்கான அடையாளங்கள் தெரிந்தன:

தொல்நிகழ் நரசிங்கப் புத்தேரி
சீலந் தருமரபிற் செய்தமைத்தான் - கோல
நெடுவரைமான் பாத தொமலையன் மலர்மடந்தை
கோமான் பழுவையர்க் கோன்

முதலடி முற்றிலும் சேராமல் நிற்கிறது, அதில் கொஞ்சம் மண்டையை உருட்டிவிட்டு, அலுத்துப் போய்க் கவனத்தை 3ம் அடியில் கொஞ்சம் செலுத்தினேன்,

‘நெடுவரைமான் பாத தொமலையன் மலர்மடந்தை’ இதில் ஈற்றிரண்டு சீர்களில் மட்டும் கலித்தளை உள்ளது, ஆனால், அடியில் தெளிவான பொருள் அமையவில்லை!

கல்வெட்டுகளில் துணைக்கால்களும் ரகரங்களும் ஒன்று போலவே இருக்கும், அதை மனத்தில் வைத்துக்கொண்டு கொஞ்சம் சொற்களை மாற்றி அமைத்துப் பார்த்தேன்:

வரை - வா, பாத - பாத் / பரத், தொ - தெர் / தேர்...

‘நெடுவாமான் பாத்தேர் மலையன் மலர்மடந்தை’ என்பது கொஞ்சம் பொருத்தமாக இருப்பதாய்த் தோன்றியது, சட்டென ‘வாமா’ என்பது ஈற்றடியின் ‘கோமான்’ என்பதனோடு எதுகை பெற்றிருப்பதை உணர்ந்தேன், ‘வாமா - மலையன்’ ஆகியன மோனைக்கும் பொருந்துகின்றன, எனவே ‘நெடு’ என்பதை முன்னுள்ள தனிச்சொல்லோடு சேர்த்துக்கொண்டு எழுதினேன்:

தொல்நிகழ் நரசிங்கப் புத்தேரி
சீலந் தருமரபிற் செய்தமைத்தான் - கோலநெடு
வாமான் பாத்தேர் மலையன் மலர்மடந்தை
கோமான் பழுவையர்க் கோன்

ஆனால் தளைதட்டுகிறதே! எனவே ‘வாமான பாத்தேர்’ என்றோ, ‘வாமான்பாத் தேரு’ என்றோ எழுத வேண்டியதாகிறது!

தொல்நிகழ் நரசிங்கப் புத்தேரி
சீலந் தருமரபிற் செய்தமைத்தான் - கோலநெடு
வாமான பாத்தேர் மலையன் மலர்மடந்தை
கோமான் பழுவையர்க் கோன்

என்று வைத்துக்கொண்டேன். இப்போது மீண்டும் முதலடிக்கு வர வேண்டும்!

’சீலம்’ என்பதனோடு எதுகை அமைவதற்கு ஏற்ப முதற்சீர் ‘தோல்நிகழ்’ என்று இருக்கலாமோ என்று தோன்றியது. ஆனால், ‘தொல்நிகழ்’ என்பதில் அமையும் சிறப்பான பொருள் ‘தோல்நிகழ்’ என்பதில் இல்லை! மேலும் தொ/தோ -க்குச் சரியான மோனை முதலடியில் எங்குமே இல்லை! எனவே, இது ‘தொ’-தானா என்ற ஐயம் எழுந்தது! கல்வெட்டுப் படத்தைக் கொஞ்சம் (ரொம்ப நேரம்!) உற்றுப் பார்த்தேன், ஒரு ‘யுரேகா’ கணம் வாய்த்தது!

‘தொ’ என்று படிக்கப்பட்டிருப்பது ‘ஞா’-வாகக் கூட இருக்கலாம் என்று பிடிபட்டது! கல்வெட்டுகளில் ஞகரத்தைக் கொஞ்சம் கழுத்தை நீட்டும் ஒட்டகச்சிவிங்கியைப் போலத்தான் எழுதுவர் (இகரமும் இதனோடு ஒத்தே இருக்கும்!), ’தொ’ அல்ல ’ஞ’ என்றதும் கச்சிதமாகப் பொருந்திக்கொள்ளும் புதிரின் பாகங்களைப் போலப் பாடல் அமைந்தது:

ஞால நிகழு நரசிங்கப் புத்தேரி
சீலந் தருமரபிற் செய்தமைத்தான் - கோலநெடு
வாமான பாத்தேர் மலையன் மலர்மடந்தை
கோமான் பழுவையர்க் கோன்.

’ஞால - நரசிங்க’ மோனை, எனவே ‘நிகழ்’ என்பது இரண்டாம் சீர் என்றாகிறது, ஆனால் அது ஓரசை, எனவே அதை ‘நிகழு(ம்)’ என்று கொண்டேன், ‘நிகழ’ என்றும் கொள்ளலாம்!

அழகான நேரிசை வெண்பாவைக் கண்டதும் உள்ளம் எய்திய உவகையை உரைப்பது இயல்வதல்ல!

அடுத்ததாகப் பாடலுக்குப் பொருள்கொள்ள முனைந்தேன்:

உலகத்தில் (ஞாலம்) புகழொடு விளங்கும் (நிகழும்) நரசிங்கப் புத்தேரி (என்ற இடத்தில் வசிக்கும்), புகழ் மிக்க மரபில் வந்தவன் (சீலம் தருமரபு) (இவ்வேரிக்கரையைச்) செய்தமைத்தான் (அல்லது, ’புத்தேரியைச் செய்தமைத்தான்’ என்றும் கொள்ளலாம்!)...

மலையன் ஆன பழுவையர் அரசன் (கோன்), அவன் பூமகளின் கணவன் (மலர்மடைந்தை கோமான்).

செய்தி தெளிவு, ஆனால், மூன்றாமடிதான் முழுதாகப் பொருள் விளங்கவில்லை (இவ்வாசிப்பை இன்னும்கூட சீர் செய்ய இடமுள்ளது போல!)

‘கோலநெடு வாமான பாத்தேர்’ என்பதை வாமன அவதாரத்தோடு தொடர்புபடுத்திக்கொள்ளலாமோ என்பது எனது ஊகம்! ’பாத்தேர்’ என்பது புலவர்களின் கவிதைகளை விரும்புபவன் என்பதாக இருக்கலாம், அன்றேல் ‘பார்த்தேர்’ என்று கொண்டு, உலகை அடைந்தவன், முன்பு உலகை அளந்து தனக்குச் சொந்தமாக்கிக் கொண்ட வாமனரிடமிருந்து உலகை அடைந்தவன் என்று கொள்ளலாம்! (ஆனால், ‘மலர்மடந்தை கோமான்’ என்று மீண்டும் வருவதால், ‘பார்த்தேர்’ என்பது அத்தனை பொருத்தமாக இல்லை!)

கவிதையின் முழுப்பொருளை உணர்ந்து சுவைப்பதில் சிறிய தடை இருந்தாலும், கல்வெட்டு வெண்பாதான் என்பதிலும், அது சொல்லும் செய்தியிலும் ஐயமில்லை!

வெண்பாவின் இலக்கணங்களைக் கணிப்பொறியியலில் உள்ள ‘சமன் சரிபார்ப்பை’ (parity check) போலக் கொண்டு ஒரு கல்வெட்டு வாசிப்பைச் சீர்செய்து கொடுத்த இந்தத் துய்ப்பு (அனுபவம்) எனக்கு மிகுந்த சுவாரசியமானதாக இருந்தது! அதை இயன்றவரை உங்களுக்கும் கடத்த முயன்றுள்ளேன், தற்பெருமை வாடை வீசியிருக்கும், பொறுத்துக்கொண்டு படித்ததற்கு நன்றி!

இப்பணியில் என்னை ஈடுபடுத்தி இதற்கும் வேறுபல பணிகளுக்கும் எங்களுக்குத் துணையாக இருந்து கற்பித்தருளும் கல்வெட்டுக் களஞ்சியம் முனைவர் சு. ராசகோபால் ஐயா அவர்களுக்கும், இக்கல்வெட்டையும் அதன் புகைப்படங்களையும் பயன்படுத்த அனுமதி கொடுத்த இவற்றைக் கண்டறிந்த திரு. பாலமுருகன் (திருவண்ணாமலை) அவர்களுக்கும், ஆவணம் இதழின் பதிப்பாளர்களாகிய தொல்லியல் கழகத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! 

-விசயநரசிம்மன்

08 February, 2010

முத்தம் - காமத்துப்பாலும் கலவியல்கல்வியும்

கலவியல்கல்வி (sex education) தேவையா இல்லையா என்பது இன்னும் விவாதத்திற்குட்பட்ட ஒன்றாகவே இருக்கும் நிலையில் என் கருத்து தேவை என்பதே - அதையும் நம் பைந்தமிழ் இலக்கியங்கள் மூலம் தரவேண்டும் என்பது என் அவா!

அந்தவகையில் முதலில் நிற்கும் தகுதியுடையது திருவள்ளுவரின் காமத்துப்பாலே. இதன் குறள்களை எடுத்துக்கொண்டு அலசி ஆய்வதன் மூலம் கலவியலை கற்பிக்க முயலப்போகிறேன் (- ”என் கருத்து” என்ற வகையில் முழுச்சுதந்திரத்துடன் இதைச் செய்யப்போகிறேன் - சரி/தவறு என்று நீங்களும் அதே சுதந்திரத்துடன் கருத்துரையுங்கள்!)

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார். -திருக்குறள் 1289
”காமம் (காதல்) மலரைவிட மென்மையானது, சிலரே அதனை
நன்கு உணர்ந்து அதன் பயனை முழுதாய் துய்ப்பர்”

என்று வள்ளுவரே உரைப்பதற்கு ஏற்ப காதலின் நுண்மைகளை புரிய தலைப்படுவோம், தலையான புலவனின் வழி நின்று...

அழகான விதயத்துடன் துவங்கினால் அது கருத்தை ஈர்க்க உதவும் - காதலே அழகுதான், அதில் அழகு முத்தம் - ஆக முத்தத்திலிருந்தே துவங்கலாம்!

முத்தம் என்றவுடன் தெரிந்திருக்குமே என்ன குறள் என்று! அதேதான்,

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர். -திருக்குறள் 1121

“பணிவான மொழியைப் பேசும் இவளின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீரானது
பாலோடு தேனைக் கலந்ததைப் போன்று உள்ளது”

என்பது நேரிடைப் பொருள். இனி, இதை சற்றே ஆழ்ந்து அலசுவோம்...

காதலியின் சிறப்பை உரைக்கும் காதலனின் மொழியாய் அமைந்த இந்தக் குறள் முத்தத்தைப் பற்றிய ஒரு விரிவான கட்டுரைக்கு அடித்தளமாய் அமையக்கூடியது.

எந்தவொரு விதயத்தைப் பற்றியும் முழுதாய்அறிய வேண்டுமாயின், ‘என்ன’, ‘எப்படி’, ‘ஏன்’, ‘எவர்’, ‘எங்கு’, ‘எப்பொழுது’ என்ற ஆறு வினாக்களுக்கும்* விடைதேட வேண்டும் என்பது என் ஆசிரியர்கள் எனக்கு கற்பித்த முறை, இவை அனைத்திற்கும் நேரிடையாகவோ அன்றியோ விடையளித்து நிற்கிறது இக்குறள்! எவ்வாறு? முதலில் கேள்விகளை வரைத்துக்கொள்வோம் -

1. முத்தம் என்றால் என்ன?
2. எப்படி முத்தமிட வேண்டும்?
3. ஏன் முத்தமிட வேண்டும்?
4. எவரை முத்தமிட வேண்டும்?
5. எங்கு முத்தமிட வேண்டும்?
6. எப்பொழுது முத்தமிட வேண்டும்?

இனி விடைகளை அக்குறளில் தேடுவோம் -

1. முத்தம் என்றால் என்ன?

இது அன்பின் வெளிப்பாடு! ’காதற் சிறப்புரைத்தல்’ எனத்துவங்கிய வள்ளுவர் எடுத்தவுடன் முத்தத்தை புகழ்வதிலிருந்து காதலில் முத்தத்திற்குள்ள இடத்தைத் தெரிந்துகொள்ளலாம்! மேலும் அறிய 2ம் கேள்விக்கு செல்வோம்...

2. எப்படி முத்தமிட வேண்டும்?

பொதுவாய் ”வாயோடு வாய்” என்பதே காதலர்களுக்கான முத்தம் என்பது தெரிந்த விதயம் - ஆனால், அது உதடுகளின் உரசலாக மட்டும் இருந்துவிடக் கூடாது என்பது வள்ளுவர் வழி அறிகிறோம். உதடுகளைத் தாண்டிச் சென்று பற்களை நெருடிச்சுவைப்பதே ஆழமான முத்தம் - அதனால்தான் வள்ளுவர் ”வால் எயிறு ஊறிய நீர்” என்று எயிற்றை (பல்லைக்) குறிப்பிடுகிறார்! இன்றைய முத்த வல்லுனர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள்!

3. ஏன் முத்தமிட வேண்டும்?

இதற்கு இரண்டாய் விடையளிப்போம். ஒன்று, முத்தம் காதலர்களுக்குள் மேலும் இணக்கத்தை தருகிறது, பாலோடு தேன் கலந்ததைப் போன்ற சுவையை அளித்து தலைவன் - தலைவியை ஒருவர்பால் ஒருவரை கட்டுகிறது.

இரண்டு, முத்தம் மருத்துவ குணங்கள் வாய்ந்தது! ஆம்! முத்தம் தருகையில் நாம் நிறைய ‘கலோரிகளை’ எரிக்கிறோம், இரத்தவோட்டத்தை இதயத்துடிப்பை பெருக்குகிறோம், மிக மகிழ்ச்சியாய், உற்சாகமாய் இருக்கிறோம் - இவையெல்லாம் உடலுக்கு மிக நல்லவை.

வள்ளுவரின் “பாலொடு தேன்” உவமை இந்த இரண்டு பயன்களையுமே குறிப்பிடுகிறது என்பது வியப்பான செய்தி - பாலும் தேனும் சுவையானவை மட்டுமல்ல மருந்தாகவும் இருப்பவை! நம் சித்த மருத்துவத்தில் இவற்றிர்கு மிகமுக்கிய இடமுண்டு.

4. எவரை முத்தமிட வேண்டும்?

முத்தத்தைப் பற்றிய புரிதலில் இது மிக தேவையான ஒன்று - யாரை முத்தமிடுவது? கண்டவர்களையெல்லாம் முத்தமிட்டால் “பாலொடு தேன்” ஆகாது - சுவையில் ஆனாலும் மருத்துவ குணத்தில் ஆகாது! கண்டவர்களையும் முத்தமிடுங்கள் என்று சொன்னால் இது கலவியல் கல்வி ஆகாது! வரையரை வேண்டும்! தலைவன் தலைவியைதான் முத்தமிடுகிறான் - ஒருவனுக்கு ஒருத்தி என்று இருக்க வேண்டும்!

இதுபோக, “பணிமொழி” என வள்ளுவர் சொல்லியிருப்பதை காண்கையில். “எவர்” என்ற வினாவிற்கு அவர் மேலும் ஒரு விடையை தந்துள்ளார் என்று அறிகிறோம்! “பணிமொழி”களையே முத்தமிட வேண்டும் - பாலொடு தேன் கலந்தது போன்ற வாய்நீர் வேண்டுமென்றால்! ஆம், மென்மையாக பேசும் இயல்புடையவர்கள் தாங்களும் மென்மையானவர்களாய் இருப்பார்கள் (ஆண் பெண் இருபாலருக்கும் இது தகும்!) ”மலரினும் மெல்லிய” காதல் மெல்லியலாளர்களுடந்தானே இனிக்கும்? அதுபோக, இயல்பில் மென்மையாய் பேசுபவர்களின் வாய் அமைப்பும் (பற்களின் அமைப்பும்) சீராய் இருக்கும் என்பது தெளிவு - “வால் எயிறு” என்றதையும் நோக்குக - ஆக “பணிமொழி”களைதான் முத்தமிட வேண்டும்!

5. எங்கு முத்தமிட வேண்டும்?

இதற்கான விடை காதலர்களின் தன்மை (அவர்களது காதலின் படினிலை), அவர்களது சூழலின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தது - பொதுவாய் தனிமையில் இடுவது நலம்! இதை “களவியலின்” வழி அறிகிறோம்!

6. எப்பொழுது முத்தமிட வேண்டும்?

இவ்வினாவிற்கு நாம் இக்குறள் அமைந்த இடத்திலிருந்து பொருள் கொள்வோம். இக்குறள் “காதற் சிறப்பு உரைத்தல்” என்னும் அதிகாரத்தில் உள்ளது, இவ்வதிகாரம் ”தகையணங்குறுத்தல்” ”குறிப்பறிதல்” ”புணர்ச்சி மகிழ்தல்” “நலம் புனைந்து உரைத்தல்” ஆகியவற்றுக்குப்பின் முறையே வைக்கப்பட்டுள்ளது. இதன்வழி, காதலியை கண்டு, அவள் அழகில் மயங்கி (தகையணங்குறுத்தல்), அவளது குறிப்பை உணர்ந்து காதலை அறிந்து (குறிப்பறிதல்), அவளோடு சேர்ந்து கலக்கையில் (புணர்ச்சி மகிழ்தல்) அவளின் நலங்களை போற்றி அவளை நம்வழிப்படுத்திபின் (நலம் புனைந்து உரைத்தல்) அவளை முத்தமிட வேண்டும் என்று அறிகிறோம்.

ஆக, ஒரு குறளில் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளைவைத்து முத்தத்திற்கு இலக்கணம் நல்கியுள்ளார் ஐயர் வள்ளுவர்! இரண்டடி இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டு நிலைக்கிறது என்றால் சும்மாவா!

ஆதலினால் காதல் செய்வீர் - முத்தம் கொடுத்து நித்தம் மகிழ்வீர்!

*ஆங்கிலத்தில் இவற்றை ‘W5H' (What, When, Where, Who, Why, How) என்போம்!

30 December, 2009

ஏழு கழுதை வயசு!

”ஏழு கழுதை வயசாச்சு, இன்னும் இப்படி...” என்று துவங்கி நீண்டுசெல்லும் அர்ச்சனைகளை நீங்களும் உங்கள் தாயிடமிருந்து கேட்டிருக்கின்றீர்களா? அப்படியானால், என்னைப் போல் நீங்களும் திருப்பி “அதென்ன ஏழு கழுதை வயசு? ஒரு கழுதைக்கு எத்தனை வயசு? ஏழு கழுதைக்கு எத்தனை வயசு?” என்று கேட்டிருப்பீர்களே!

“யாருக்குத் தெரியும்! எதோ, எங்க அம்மா என்னை அப்படி திட்டுவா, நானும் அதையே சொல்றேன்; நாங்களாம் உன்னை மாதிரி எங்க அம்மாவை எதிர்த்து கேள்வி கேட்டதில்ல” என்ற விடை எனக்கு கிடைத்ததைப் போல் உங்களுக்கும் கிடைத்திருக்குமே!

ஒரு கட்டத்தில் இதைப்பற்றி (எங்களின் இம்சை தாங்காமல்) நிறைய சிந்தித்து, “கடவுள் உயிரிணங்களைப் படைத்து ஒவ்வொன்றிற்கும் ஒரு கால அளவை ஆயுளாக தர, மனிதனைத் தவிர மற்றவை எங்களுக்கு இத்தனை ஆண்டுகள் தேவையில்லை குறைத்துக் கொடுங்கள் எனக் கேட்க, கடவுளும் அவ்வாறே அருள, அவைகள் வேண்டாமென ஒதுக்கிய வாழ்நாட்களை மனிதன் தனக்கு பெற்றுக்கொண்டான், அந்த வகையில் ஏழு வயதுக்கு மேற்பட்ட வாழ்நாள் கழுதையினுடையது, அதனால் ஏழு கழுதை வயசு என்று சொல்லியிருப்பார்கள்” என்ற ஒரு விளக்கத்தை (இதன் அடிப்படையில்தான் “நாற்பது வயதில் நாய்க்குணம்” என்ற பழமொழி வழங்குவதாய் உபரி தகவலோடு) ஒருநாள் தந்தார் எங்கள் பாட்டி!

அவ்வளவில் அந்த விளக்கத்தோடு நின்றுவிட்டிருந்த என் “ஏழு கழுதை வயசு” விளக்கம், அண்மையில் நான் “புறப்பொருள் வெண்பாமாலை” நூலை வாங்கிப் படித்தபொழுது சற்று மாறிவிட்டது, அதை பகிர்ந்துகொள்ளவே இந்த இடுகை (கருத்து சரியோ தவறோ, ஏற்புடையதோ அன்றோ, கருத்துக்களை இடுங்கள், விவாதிப்போம்)...

வெட்சி, கரந்தை என்று பொதுவாக சிலத்திணைகளை அறிந்திருந்த எனக்கு “பொதுவியல் திணை”-யில் ஒரு துறை “ஏழு கழுதை வயசை” நினைவூட்டியது, அது பின்வருமாறு,

பொதுவியற் படலம் - ஐந்தாவது துறை - ஏழகநிலை:

ஏழகம் ஊரினும் இன்னன் என்றவன்
தாழ்வில் ஊக்கமொடு தகைபுகழ்ந் தன்று.
(பு.பொ.வெ.மா - கொளு-10-5)


ஏழகம்” என்பது ஆட்டுக்கிடாய் - மன்னவன் (குதிரைக்கு பதில்) ஆட்டுக்கிடாய் ஏறி விளையாடும் வயதினனாய் இருப்பினும், ஆட்சிப்பொறுப்பை ஏற்று செவ்வனே நடத்துகையில் அவனை புகழ்வதே “ஏழகநிலை” என்பது கருத்து.

மன்னர்கள் சிறுவயதில், குதிரை ஏற போதிய உயரம் இல்லாத நிலையில், ஆட்டுக்கிடாய் ஏறி குதிரைப்போல் செலுத்தி விளையாடுவார்கள் என்பது என்வரையில் புதிய செய்தி - சங்கவிலக்கியத்தில் மிகவிளம் வயதில் ஆட்சியேற்ற, பாடல்பெற்ற ஒரே மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனே, அவன்மேல் ஏழகப்பாடல் எதுவுமில்லையே!

நம் செய்திக்கு வருவோம், ஒரு மன்னன் இளம்வயதினன் என்று வைத்துக்கொள்ளுங்கள், புலவர்கள் பாடிப்புகழும் அளவிற்கு நன்றாய் ஆட்சியும் செய்கின்றான் என்றும் கொள்ளுங்கள் - நம் நெடுஞ்செழியனைப் போல் - அன்னிலையில் அண்டைநாட்டு இளவரசன் ஒருவன் பொறுப்பின்றி திரிந்துகொண்டிருக்கிறான் என்றும் கொள்ளுங்கள், அவனது தாய் (அஃதாவது அந்நாட்டின் அரசி) அவனை எப்படி திட்டியிருப்பார்?

”அவனை (நம் கணக்குப்படி, நெடுஞ்செழியனை) பாரு, ஏழக வயசுல என்னென்ன செயல்கள் செய்யுறான், நீயும் இருக்கியே, வெட்டியா ஊரைச்சுத்திகிட்டு, வம்பு செய்துகிட்டு...” என்றுதானே!

ஒருவேளை, இந்த “ஏழக வயசுல” என்பதுதான் மருவி இன்று “ஏழு கழுதை வயசுல” என்றாகியிருக்குமோ?...