28 October, 2010

கல்லில் கண்ட கலைவண்ணம்

குடைவரைக் கோயில்கள்

குடைவரைக் கலை உலகின் மிக பழமையான கலையாகும். இக்கலை நம் நாட்டில் மிகவும் பிற்பட்டக் காலத்திலேயே ஏற்பட்டாலும், உலகளவில் இங்கு மட்டும் தான் பெரியஅளவிலான வளர்ச்சிப் பெற்று விளங்கியது. நம் நாட்டில் 1200க்கும் மேற்பட்ட குடைவரைகள் இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 900 பெளத்த சமயத் தொடர்புடையவை. எஞ்சிய 300 சமண மற்றும் இந்து சமயத் தொடர்புடையவை.
 
தென்னிந்தியாவில் இக்கலை மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும் வேரூன்றியது. பெளத்த சமயத்தினரால் போற்றப்பட்ட இக்கலை நாளடைவில் இந்து சமயத்தினராலும் வளர்க்கப்பட்டது.
 
 தமிழ்நாட்டில் இக்குடைவரைக் கலை ஏறக்குறைய 800 ஆண்டுகள் கழிந்தப் பின்னரே தோற்றுவிக்கப்பட்டது. சங்கக் காலத்தில் வாழ்ந்த சமணர்கள் தங்களது வாழ்விடங்களாக இயற்கையாக அமைந்த குகைகளைத் தங்களது வசதிக்கேற்றவாறு அமைத்துக் கொண்டனர். மழைநீர் குகைகளில் விழாதவாறு கூரைகளின் விளிம்புகளில் கால்கள் அமைத்தும், படுக்கைகளைத் தாங்கள் உறங்குவதற்கு ஏற்றவாறு உருவாக்கியும் தமிழகத்தில் இக்கலை உருவாகுவதற்கு முன்னோடிகளாக இருந்தனர்.
 
குடைவரைகள் உருவாக்க அதிக உழைப்பும் பொருளும் தேவைப்பட்டது. கட்டுமான கலையைவிட இது அதிக தொழில்நுட்பம் வாய்ந்ததாக விளங்கியது. பாறையில் சிறு பிளவு ஏற்பட்டாலும் பணியை கைவிட வேண்டிய நிலை ஏற்படும். மேலும் தமிழகத்தில் உறுதியான பாறைகள் உள்ள மலைகளிலும் குன்றுகளிலும்தான் குடைவரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் குடைவதும் மிக கடினமானதே. மேற்கிந்தியப் பகுதிகளில் மிருதுவான பாறைகளிலேயே குடைவரைகள் அமைக்கப்பட்டன.
 
தமிழகத்தை ஆட்சி செய்தப் பேரரசர்களான பாண்டியர்கள், பல்லவர்கள் மற்றும் அவர்களின் கீழ் இருந்த சிற்றரசர்களான முத்தரையர்கள், அதியமான் மரபினர்களுமே குடைவரைக் கலை வளர பெரிதும் பங்களித்தவர்கள். பல்லவப் பேரரசு தோன்றிய பின் (சுமார் கி.பி.600) குடைவரைக் கலை பெரிதும் வளர்ச்சி பெற்றது. இக்கலையைத் தமிழகத்தில் தோற்றிவித்தவர்கள் பல்லவர்களே (முதலாம் மகேந்திரவர்ம பல்லவனே) என்னும் கருத்து நிலவி வந்தாலும், அவர்களின் காலத்துக்கு முன்பே தமிழகத்தில் இக்கலை இருந்ததற்குச் சான்றாக பிள்ளையார்பட்டி குடைவரை (இங்குள்ள எழுத்தமைப்புக்கள் மகேந்திரவர்மனுக்கு முந்தைய காலத்தது) உள்ளது. மேலும் பாண்டிய நாட்டில் உள்ள சில குடைவரைகளின் அமைப்புகளிலிருந்து அவை பல்லவர் காலத்திற்கு முந்தையது என அறிய முடிகிறது.
 
தமிழகத்தில் குடைவரைகள் தருமபுரி, ஈரோடு, கோவை, தஞ்சை ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. காரணம் இக்கலையைப் போற்றிய அரசர்களின் ஆதிக்கம் பெரும்பாலும் இப்பகுதியில் காணப்படவில்லை. மேலும் இப்பகுதியை ஆண்ட சோழர்கள் கற்றளி கோயில்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் குடைவரைக்குக் கொடுக்காததே ஆகும். எனினும் அவர்கள் குடைவரைக் கோயில்களுக்குக் கட்டுமான விரிவாக்கங்களைச் செய்தனர்.
 
பாண்டிய பல்லவர்கள்
 
பல்லவ, பாண்டிய குடைவரைகளுக்கு இடையே பல வேறுபாடுகள் உள்ளன. பல்லவ குடைவரைகளில் இறை சிற்பங்கள் அதிகமாக காணப்படுவதில்லை. கருவறைகளில் மூலக் கடவுள்கள் தனியாக மரத்தினாலோ, ஓவியங்களினாலோ அமைக்கப்பட்டனர். ஆனால் பாண்டியர் குடைவரைகளில் தாய் பாறையிலேயே கருவறைகளில் கடவுள் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இறை உருவங்களும் மிகுந்து காணப்படும்.
 
தொடக்கக் காலப் பல்லவர் குடைவரைகளில் வழிபாட்டு முறை இருந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் பாண்டிய குடைவாரைகளில் நாள் தோறும் பூசைகள் நடத்தப்பட்டு வந்தது என்பதற்கு சான்றாக அபிஷேக நீர் வெளியேறும் கால்கள் கருவறையில் அமைந்துள்ளன.
 
இரண்டாவது கட்ட பல்லவர் குடைவரைகளில் கருவறையின் பின்புறம் சோமாஸ்கந்தரின் புடைப்புச் சிற்பமும், பாண்டியர்களின் குடைவரைகளில் விநாயகரின் புடைப்புச் சிற்பமும் தனியாக குடைவரையை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும்.
 
தென் தமிழகத்தில் குடைவரைகள் சிலவற்றில் இசைக் குறித்த கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.
 
முத்தரையர்கள்
 
முத்தரையர்கள் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஆட்சி புரிந்து வந்தனர். இவர்களைப் பற்றிய குறிப்புகள் முதலில் தொண்டை மண்டலத்தில் பல்லவர் கால நடுகற்களில் கிடைக்கின்றன. இவர்களின் குடைவரைக் கோயில்கள் புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் காணப்படுகின்றன. இவர்கள் பெரும்பாலும் பல்லவர்களின் ஆட்சிக்குக் கீழ் இருந்ததால் இவர்களின் குடைவரைகளில் பல்லவர்களின் பாணியைக் காணமுடிகிறது. மலையடிப்பட்டி, திருவெள்ளறை, நார்த்தாமலை (நகரத்தார்மலை), குன்னாண்டார் கோயில், பூவாலைக்குடி போன்றவை  இவர்களது குடைவரைக் கோயில்கள் ஆகும்.
 
நார்த்தாமலை (நகரத்தார்மலை)
 
புதுக்கோட்டையில் இருந்து கீரனூர் செல்லும் வழியில் நார்த்தாமலை என்னும் ஊர் உள்ளது. இவ்வூரைக் கல்வெட்டுகள் ‘நகரத்தார் மலை’ என்றும், ’குலோத்துங்க சோழப்பட்டினம்’ என்றும், ’தெலுங்கு குலகாலபுரம்’ என்றும் குறிக்கின்றன. சோழர் காலத்தில் சிறந்த வணிக நகரமாக விளங்கியது.
    நார்த்தாமலை மீது இரண்டு குடைவரைக் கோயில்கள் குடையப்பட்டுள்ளன. விஜயாலய சோழன் கட்டிய கற்றளியும் இம்மலை மீது உள்ளது. குடைவரைகள் இரண்டும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
 
  
சமணக்குடகு
 
முதலில் உள்ள குடைவரைக் கோயில் சமணக்குடகு என்று அழைக்கப்படுகிறது. இது முற்காலத்தில் சமணர்களின் வசிப்பிடமாக இருந்து, பிறகு திருமாலுக்குரிய கோயிலாக மாறியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.
 

இது முன்புற மண்டபமும் கருவறையையும் கொண்டது. முன்புற மண்டபத்தில் திருமாலின் 12 உருவங்கள் காணப்படுகின்றது. ஏழு அடி உயரமுள்ள வாயிற்காவலர் சிற்பங்களையும் இக்குடைவரைக் கொண்டு விளங்குகின்றது. யாளி, சிங்கம், யானை போன்ற சிற்பங்களும் இங்கு செதுக்கப்பட்டுள்ளன.
 
பழியிலி ஈஸ்வரம்
 
இது சிவபெருமானுக்கு உரிய கோயிலாகும். கருவறையில் சதுர வடிவ ஆவுடையாருடன் இலிங்கம் உள்ளது, இது தாய்ப் பாறையில் அமைக்கப்பட்டது அல்ல. வாயில் காவலர் சிலையும் தனியாகவே உள்ளது.
 
இக்குடைவரையின் முன்பகுதியில் உள்ள இடிந்த மண்டபத்தின் அடிப்பகுதியில் காணப்படும் பல்லவர் கல்வெட்டு ”கோவிசையை நிருபதுங்க விக்ரமர்க்கு யாண்டு ஏழாவது விடேல் விடுகு முத்தரையன் மகன் சாத்தான் பழியிலி குடைந்தெடுத்த ஸ்ரீகோயில்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சாத்தான் பழியிலி இக்கோயிலை நிருபதுங்க பல்லவன் காலத்தில் குடைந்தமையால் அவன் பெயரிலேயே வழங்கப்படுகிறது.
 
 
விஜயாலய சோழன் கற்றளி
 
இங்கு காணப்படும் குடைவரை கோயில்களுக்கு எதிர்புறமாக அமைந்துள்ளது விஜயாலய சோழன் கற்றளி. பிறகாலத்தில் விஜயாலய சோழன் கட்டியமையால் இது அவனது பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் சிவபெருமானுக்கு உரியது ஆகும். 
 
இது மிக அழகிய கலைநயத்துடன் அமைந்துள்ளது. கருவரையில் சிவபெருமானையும், வாயில் புறத் தூணின் பக்கத்திற்கு இருபுறமும் வாயிற்காவலர் சிற்பங்கள் அமைந்துள்ளன. கோயிலுக்கு முன்பாக நான்கு தூண்களுக்கு நடுவில் நந்திப்பெருமான் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
 
முதன்மைக் கற்றளியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிறுசிறு கோயில்கள் கோபுரங்கள் முழுமையாக முற்றுப் பெறாமலும், கருவரையில் இறை உருவங்கள் பெறமால் உள்ளன.
 
முடிவுரை
 
நம் முன்னோர் எத்தனையோ நுண்கலைகளில் சிறந்து விளக்கினர் என்பதை நாம் அறிவோம், இன்றைய தொழில்நுட்பங்களும் கண்டு வியக்கும் வண்ணம் பல நூற்றாண்டுகட்கு முன்னரே அமைந்த இத்தகைய குடைவரைகள் நம் கண்களுக்கும் கருத்துக்கும் இன்றும் விருந்தளித்து வருகின்றன. இவற்றை முறையாக பேணிக்காப்பதும், இவற்றின் பெருமையையும் மதிப்பையும் உலகறியச் செய்வதும் நம் கடமையாகும்.



பின்குறிப்பு:


அண்மையில் இந்த நகரத்தார் மலையைச் சுற்றிப் பார்த்து ஆசைத்தீர புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்த என் தோழி, தமிழனின் இந்த பெருமையையும் நான் என் வலையில் பகிர வேண்டும் எனக் கேட்டதோடு அல்லாமல் இந்தக் கட்டுரையையும் புகைப்படங்களையும் அளித்தாள். அவளுக்கு என் நன்றிகளை இங்ஙனம் தெரிவித்துக் கொள்கிறேன். 
நன்றி செல்வி. பெ. தாமரை* :-)

*புகைப்படங்கள் மற்றும் இக்கட்டுரையின் காப்புரிமையும் அவளுக்கே உரியவை.

22 August, 2010

இயற்பியல் இலக்கணம் - இது எப்படி இருக்கு!

ஆர்வமும் கோளாறும் சேர்ந்தால் என்ன ஆகும்? விடை கீழே... தமிழுணர்வும், இயற்பியல் அறிவும் சேர்ந்ததன் விளைவு...

பாவகைகளைக் கற்று அவற்றில் பாடல் இயற்றிப் பார்ப்பது என் ஆர்வங்களில் ஒன்று, அவ்வழியில் பண்டைத் தமிழர் அறிவுப்புலங்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்திய “நூற்பா” என்னும் பா வகையில் யாத்துப் பார்க்க ஆவல் வந்தது, அதற்கான சரியான பாடுபொருள் இலக்கணமே, ஆனால் தமிழிலக்கணம் பாடும் தகுதி எனக்கில்லை என்பதினால் இயற்பியல் இலக்கணம் பாடியுள்ளேன்!

அறிவுப்புலங்களை இம்மாதிரி நூற்பாக்களாகச் செய்து வைப்பதால் அவற்றை மனப்பாடம் செய்வதும், தக்க சமயத்தில் இடத்தில் அவ்வறிவைப் பயன்படுத்துவதும் எளிதாகும், (மனப்பாடம் செய்வது ஆழ்மனதில் அப்பொருளைக் கொண்டு சேர்க்கும் என்பது என் கருத்து - மேலும் இங்கே நான் குறிப்பிடும் மனப்பாட முறையும் இன்று நம் பள்ளிகளில் கையாளப்படும் மனப்பாட முறையும் முற்றிலும் வேறானவை ஆகும்!)

மேல் குறிப்பிட்ட காரணங்களால் இயற்பியல் இலக்கணம் பயந்தரும் என்று நான் எண்ணுகிறேன், அது மெய்யா அல்லது மேலை நாட்டார் முறைகளைப் பெரிதும் பயன்படுத்தும் இற்றை நாளில் இதெல்லாம் வெட்டிவேலையா என்பதை நீங்கள்தான் கருத்துரைக்க வேண்டும் (எதிரொலிகளின் அடிப்படையில் என் முயற்சியை நான் தொடர்ந்து முடிப்பதோ அல்லது கைவிடுவதோ நிகழும் - என்னை அறிந்தவர்கள் அருள்கூர்ந்து “நன்று” என பொத்தாம் பொதுவாக கருத்து இடாமல், முடிந்தவரை அலசி ஆய்ந்து, கிழித்து தைத்து, ஆக்கப்பூர்வமாய் கருத்திட்டுப் போனால் நலம்!)

இயற்பியல் இலக்கணம்

இறை வணக்கம்

அணுவின் அணுகி இருப்பது எதுவோ
அண்டத்தின் அகண்டு நிலைப்பதும் அதுவே
இயற்கை எனினும் இறைவன் எனினும்
இயக்குவ தொன்றே இருப்பமதை வாழ்த்தியே!           0.1

அவையடக்கம்

அண்டத்தின் அகத்தே மண்டலமோர் தூசி
மண்டலத்தின் மடியில் கதிரோர் தூசி
கதிரொடு ஒட்டிய உலகோர் தூசி
உலகினில் உழலும் உயிர்கள் தூசி
உலகினில் உழலும் உயிர்தூசி ஒன்று
உணரா முதலை உரைசெய் வதுவோ!                0.2
______________________________________________________

இயல் ஒன்று - இயக்கவியல் (Mechanics)

இறைவாழ்த்து 

இயங்குவ தியக்கினை இருப்ப திருத்தினை
மயங்கும் மதிக்கு மறையாய் நின்றனை
இயக்கவியல் அறைகுவன் இளையன்
பயக்கும் பயனெலாம் நீயென போற்றியே!          1.1
___________________________________________________

நூட்டன் விதிகள் 

நிற்கும் இயங்கும் பொருட்களின் இயல்பை
கற்கும் படிமூன்று கருகோள் கொண்டு
நூட்டன் என்பான் நுதலிய விதிகளை
காட்டுதும் ஈண்டு ஐயற அறிகவே,                         1.2

முதலே,
நிற்பவை நகரா நகர்வன நில்லா
உற்றோர் புறவிசை உறழ்த்தல் இன்றேல்.        1.3

(இயக்கம் இன்றி இருப்பவையும், இயக்கத்தொடு இருப்பவையும் வெளியிலிருந்து ஒரு புறவிசை [External Force] செயல்பட்டால் அன்றி தத்தமது இயக்கதிலிருந்து மாறுபடாது - அஃதாவது, ஒரு பொருளால் தானாகவே தனது இயக்கத்தை மாற்றிக் கொள்ள இயலாது; இத்தன்மை சடத்துவம் எனப்படும், அதனை கீழே நூற்பா 1.6-ல் காண்க)

இரண்டே,
உற்று உறழ்த்தும் புறவிசை அளவொடு
பற்றது கொள்ளும் பொருளுறும் முடுகே.         1.4

(முதல் விதியில் கூறியவாறு, ஒரு பொருள் புறவிசை ஒன்றினால் தனது இயக்கத்தில் மாற்றம் கொள்கையில், அம்மாற்றமானது அப்புறவிசையின் அளவை அடிப்படையாகக் கொண்டே இருக்கும் - Acceleration = Force / Mass - நூற்பா 1.7 காண்க; உறழ்த்துதல் - நிலை மாற்றுதல், முடுகு - Acceleration)

மூன்றே,
எல்லா விசைக்கும் எதிர்விசை எழுமே
சொல்லிய அவ்விரண் டும்அள வொக்குமே.    1.5

(இது நாம் அனைவரும் நன்கறிந்த, ஆனால் முறையாக புரிந்து கொள்ளாத, ஒரு விதிதான்! நூற்பா 1.8 காண்க)

சடத்துவம் (Inertia)

இயக்கத்தின் விலகாமை இருப்பவைக்கு இயல்பே.    1.6

(தானாக தன் இயக்கத்திலிருந்து மாறாமல் இருக்கும் தன்மை அனைத்து பொருள்களுக்கும் இயல்பாகும் - இதுவே சடத்துவம் - இது முதல் விதியின் பயனாகும்)

F = m.a 

முடுகொடு நிறையின் முறைபெருக் கத்தை
படுவிசை அதனின் பலமென்ப புலவர்.                          1.7

(முடுகு - விசையால் உந்தப்படும் பொருளின் திசைவேகம் மாறும் அளவு (Acceleration); நிறை - பொருளின் திணிவு (Mass); இங்கே முறை பெருக்கம் எனச் சொல்லியது விசையும் முடுகும் திசையன்கள் ஆனால் நிறை திசையிலி என்பதைக் குறிக்க; முறை பெருக்கம் - திசையனுகுரிய பெருக்கம்)

விசையும் எதிர்வும் வினைபுரிந் திடுமே
அசையும் அசைக்கும் அவற்றில் முறையே.               1.8

(இது இரண்டாம் விதிக்கு புறனடை; விசைக்கு எதிர்விசை எழும் என்று சொல்லப்பட்டது, அவ்வாறு எழும் எதிர்விசையானது விசைக்கு காரணமான பொருளில் செயல்படும், அதாவது, விசையும் எதிர்விசையும் செயல்படும் பொருட்கள் வேறுவேறு ஆகும் - இதுவே ”அசையும்” ”அசைக்கும்” எனக் குறிக்கப்பட்டது; எடுத்துக்காட்டாய், மட்டையால் பந்தை அடிக்கையில் பந்தில் (அசையும் பொருள்) விசையும், மட்டையில் (அசைக்கும் பொருள்) எதிர்விசையும் செயல்படும்)

விசைஎன் பதனை விளக்கும் காலை
திசையுடன் அளபு சிவணிய துவ்வே.                             1.9

(விசை என்பதன் இயல்பைச் சொல்லின் அது திசையும் அளபும் பெற்ற திசையன் ஆகும்; சிவணுதல் - சேர்தல்)

விரைவும் முடுகும் விசையியல் பினவே.                   1.10

(திசைவேகமும்[விரைவு], முடுகும் கூட விசையைப் போலவே திசையன்கள் ஆகும்)

பொருள் என்பதன் பொருள் கூறிடின்
உருவத் திண்மையும் நிறையும் பெறுவதே.               1.11

(பொருள் [Particle/Body] என்பதன் இயல்பைச் சொல்கையில் அது உருவத்தின்மையும் [Solid] நிறையும் [Mass] பெற்று இருப்பது)
______________________________________________


இப்பொழுது இத்தோடு முடித்துக் கொள்கிறேன், இன்னும் ஒளியியல், வானியல் ஆகியவற்றிலும் சில நூற்பாக்கள் இயற்றியுள்ளேன், அவற்றை பின்னர் - படிப்பவர்களின் பின்னூட்டத்தினைப் பொறுத்து - தருகிறேன்.

இதைப் படிப்பதில் நேரம் செலவிட்டமைக்கு மிக்க நன்றி... மறக்காமல் கருத்திட்டுச் செல்லவும்...

08 February, 2010

முத்தம் - காமத்துப்பாலும் கலவியல்கல்வியும்

கலவியல்கல்வி (sex education) தேவையா இல்லையா என்பது இன்னும் விவாதத்திற்குட்பட்ட ஒன்றாகவே இருக்கும் நிலையில் என் கருத்து தேவை என்பதே - அதையும் நம் பைந்தமிழ் இலக்கியங்கள் மூலம் தரவேண்டும் என்பது என் அவா!

அந்தவகையில் முதலில் நிற்கும் தகுதியுடையது திருவள்ளுவரின் காமத்துப்பாலே. இதன் குறள்களை எடுத்துக்கொண்டு அலசி ஆய்வதன் மூலம் கலவியலை கற்பிக்க முயலப்போகிறேன் (- ”என் கருத்து” என்ற வகையில் முழுச்சுதந்திரத்துடன் இதைச் செய்யப்போகிறேன் - சரி/தவறு என்று நீங்களும் அதே சுதந்திரத்துடன் கருத்துரையுங்கள்!)

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார். -திருக்குறள் 1289
”காமம் (காதல்) மலரைவிட மென்மையானது, சிலரே அதனை
நன்கு உணர்ந்து அதன் பயனை முழுதாய் துய்ப்பர்”

என்று வள்ளுவரே உரைப்பதற்கு ஏற்ப காதலின் நுண்மைகளை புரிய தலைப்படுவோம், தலையான புலவனின் வழி நின்று...

அழகான விதயத்துடன் துவங்கினால் அது கருத்தை ஈர்க்க உதவும் - காதலே அழகுதான், அதில் அழகு முத்தம் - ஆக முத்தத்திலிருந்தே துவங்கலாம்!

முத்தம் என்றவுடன் தெரிந்திருக்குமே என்ன குறள் என்று! அதேதான்,

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர். -திருக்குறள் 1121

“பணிவான மொழியைப் பேசும் இவளின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீரானது
பாலோடு தேனைக் கலந்ததைப் போன்று உள்ளது”

என்பது நேரிடைப் பொருள். இனி, இதை சற்றே ஆழ்ந்து அலசுவோம்...

காதலியின் சிறப்பை உரைக்கும் காதலனின் மொழியாய் அமைந்த இந்தக் குறள் முத்தத்தைப் பற்றிய ஒரு விரிவான கட்டுரைக்கு அடித்தளமாய் அமையக்கூடியது.

எந்தவொரு விதயத்தைப் பற்றியும் முழுதாய்அறிய வேண்டுமாயின், ‘என்ன’, ‘எப்படி’, ‘ஏன்’, ‘எவர்’, ‘எங்கு’, ‘எப்பொழுது’ என்ற ஆறு வினாக்களுக்கும்* விடைதேட வேண்டும் என்பது என் ஆசிரியர்கள் எனக்கு கற்பித்த முறை, இவை அனைத்திற்கும் நேரிடையாகவோ அன்றியோ விடையளித்து நிற்கிறது இக்குறள்! எவ்வாறு? முதலில் கேள்விகளை வரைத்துக்கொள்வோம் -

1. முத்தம் என்றால் என்ன?
2. எப்படி முத்தமிட வேண்டும்?
3. ஏன் முத்தமிட வேண்டும்?
4. எவரை முத்தமிட வேண்டும்?
5. எங்கு முத்தமிட வேண்டும்?
6. எப்பொழுது முத்தமிட வேண்டும்?

இனி விடைகளை அக்குறளில் தேடுவோம் -

1. முத்தம் என்றால் என்ன?

இது அன்பின் வெளிப்பாடு! ’காதற் சிறப்புரைத்தல்’ எனத்துவங்கிய வள்ளுவர் எடுத்தவுடன் முத்தத்தை புகழ்வதிலிருந்து காதலில் முத்தத்திற்குள்ள இடத்தைத் தெரிந்துகொள்ளலாம்! மேலும் அறிய 2ம் கேள்விக்கு செல்வோம்...

2. எப்படி முத்தமிட வேண்டும்?

பொதுவாய் ”வாயோடு வாய்” என்பதே காதலர்களுக்கான முத்தம் என்பது தெரிந்த விதயம் - ஆனால், அது உதடுகளின் உரசலாக மட்டும் இருந்துவிடக் கூடாது என்பது வள்ளுவர் வழி அறிகிறோம். உதடுகளைத் தாண்டிச் சென்று பற்களை நெருடிச்சுவைப்பதே ஆழமான முத்தம் - அதனால்தான் வள்ளுவர் ”வால் எயிறு ஊறிய நீர்” என்று எயிற்றை (பல்லைக்) குறிப்பிடுகிறார்! இன்றைய முத்த வல்லுனர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள்!

3. ஏன் முத்தமிட வேண்டும்?

இதற்கு இரண்டாய் விடையளிப்போம். ஒன்று, முத்தம் காதலர்களுக்குள் மேலும் இணக்கத்தை தருகிறது, பாலோடு தேன் கலந்ததைப் போன்ற சுவையை அளித்து தலைவன் - தலைவியை ஒருவர்பால் ஒருவரை கட்டுகிறது.

இரண்டு, முத்தம் மருத்துவ குணங்கள் வாய்ந்தது! ஆம்! முத்தம் தருகையில் நாம் நிறைய ‘கலோரிகளை’ எரிக்கிறோம், இரத்தவோட்டத்தை இதயத்துடிப்பை பெருக்குகிறோம், மிக மகிழ்ச்சியாய், உற்சாகமாய் இருக்கிறோம் - இவையெல்லாம் உடலுக்கு மிக நல்லவை.

வள்ளுவரின் “பாலொடு தேன்” உவமை இந்த இரண்டு பயன்களையுமே குறிப்பிடுகிறது என்பது வியப்பான செய்தி - பாலும் தேனும் சுவையானவை மட்டுமல்ல மருந்தாகவும் இருப்பவை! நம் சித்த மருத்துவத்தில் இவற்றிர்கு மிகமுக்கிய இடமுண்டு.

4. எவரை முத்தமிட வேண்டும்?

முத்தத்தைப் பற்றிய புரிதலில் இது மிக தேவையான ஒன்று - யாரை முத்தமிடுவது? கண்டவர்களையெல்லாம் முத்தமிட்டால் “பாலொடு தேன்” ஆகாது - சுவையில் ஆனாலும் மருத்துவ குணத்தில் ஆகாது! கண்டவர்களையும் முத்தமிடுங்கள் என்று சொன்னால் இது கலவியல் கல்வி ஆகாது! வரையரை வேண்டும்! தலைவன் தலைவியைதான் முத்தமிடுகிறான் - ஒருவனுக்கு ஒருத்தி என்று இருக்க வேண்டும்!

இதுபோக, “பணிமொழி” என வள்ளுவர் சொல்லியிருப்பதை காண்கையில். “எவர்” என்ற வினாவிற்கு அவர் மேலும் ஒரு விடையை தந்துள்ளார் என்று அறிகிறோம்! “பணிமொழி”களையே முத்தமிட வேண்டும் - பாலொடு தேன் கலந்தது போன்ற வாய்நீர் வேண்டுமென்றால்! ஆம், மென்மையாக பேசும் இயல்புடையவர்கள் தாங்களும் மென்மையானவர்களாய் இருப்பார்கள் (ஆண் பெண் இருபாலருக்கும் இது தகும்!) ”மலரினும் மெல்லிய” காதல் மெல்லியலாளர்களுடந்தானே இனிக்கும்? அதுபோக, இயல்பில் மென்மையாய் பேசுபவர்களின் வாய் அமைப்பும் (பற்களின் அமைப்பும்) சீராய் இருக்கும் என்பது தெளிவு - “வால் எயிறு” என்றதையும் நோக்குக - ஆக “பணிமொழி”களைதான் முத்தமிட வேண்டும்!

5. எங்கு முத்தமிட வேண்டும்?

இதற்கான விடை காதலர்களின் தன்மை (அவர்களது காதலின் படினிலை), அவர்களது சூழலின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தது - பொதுவாய் தனிமையில் இடுவது நலம்! இதை “களவியலின்” வழி அறிகிறோம்!

6. எப்பொழுது முத்தமிட வேண்டும்?

இவ்வினாவிற்கு நாம் இக்குறள் அமைந்த இடத்திலிருந்து பொருள் கொள்வோம். இக்குறள் “காதற் சிறப்பு உரைத்தல்” என்னும் அதிகாரத்தில் உள்ளது, இவ்வதிகாரம் ”தகையணங்குறுத்தல்” ”குறிப்பறிதல்” ”புணர்ச்சி மகிழ்தல்” “நலம் புனைந்து உரைத்தல்” ஆகியவற்றுக்குப்பின் முறையே வைக்கப்பட்டுள்ளது. இதன்வழி, காதலியை கண்டு, அவள் அழகில் மயங்கி (தகையணங்குறுத்தல்), அவளது குறிப்பை உணர்ந்து காதலை அறிந்து (குறிப்பறிதல்), அவளோடு சேர்ந்து கலக்கையில் (புணர்ச்சி மகிழ்தல்) அவளின் நலங்களை போற்றி அவளை நம்வழிப்படுத்திபின் (நலம் புனைந்து உரைத்தல்) அவளை முத்தமிட வேண்டும் என்று அறிகிறோம்.

ஆக, ஒரு குறளில் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளைவைத்து முத்தத்திற்கு இலக்கணம் நல்கியுள்ளார் ஐயர் வள்ளுவர்! இரண்டடி இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டு நிலைக்கிறது என்றால் சும்மாவா!

ஆதலினால் காதல் செய்வீர் - முத்தம் கொடுத்து நித்தம் மகிழ்வீர்!

*ஆங்கிலத்தில் இவற்றை ‘W5H' (What, When, Where, Who, Why, How) என்போம்!

பகல்தவச் சிறிதே - பழைய ஹைக்கூ 2

ஹைக்கூ ஒரு அழகான கவிதை வடிவம் - ”வடிவம்” என்ற பொழுதிலும் ஹைக்கூவின் சுவை அதன் யாப்பைவிட அதில் சொல்லப்பட்ட பொருளிலேயே பெரும்பான்மை உள்ளது - இதை இன்றைய ஹைக்கூ புனைஞர்கள் (என்னையும் சேர்த்துதான்) இன்னும் முழுதாய் புரிந்து கொள்ளவில்லை என்பதே என் கருத்து!

ஒரு நல்ல ஹைக்கூ படிபவரின் எண்ணவோட்டத்தை தடுத்து நிறுத்தி, அதனை ஒருமுகப்படுத்தி சீராக்கும் - இதற்கு அந்த ஹைக்கூவின் சொற்கோவை (யாப்பு) சிறிது உதவுமென்றால், பெரிதும் உதவுவது அதன் பொருளமைதியே - உலகின் இயல்புகளை, அதன் மெய்ப்பொருட்களை உரைக்கையில்தான் இந்த தடுத்துச்சீராக்கல் இயலும் - இந்தவகையில் நம் பழைய (குறிப்பாய் சங்க) இலக்கியங்களின் “பொருண்மொழிக் காஞ்சி”, “முதுமொழிக் காஞ்சி”, “செவியறிவுறூஉ” போன்ற துறைகள் உலகின் இயல்பை எடுத்துச் சொல்வதில் ஹைக்கூக்களை ஒத்து இருக்கின்றன (ஆனால் சற்றே பெரிதாய்!) இவற்றின் பொருளின் சாரத்தில் ஹைக்கூக்களைக் காண்பது எளிது (இதையும் காண்க).

ஆனால், அரசனைப் புகழும் “வாகை” பாட்டில் ஒரு ஹைக்கூவை அழகாய் பொதிந்துள்ளார் இடைக்குன்றூர் கிழார்!

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் போர் திறத்தை இவ்வாறு புகழ்கிறார் அவர்,

மூதூர் வாயில் பனிக்கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து
தெண்கிணை மன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன் எதிர்த்த
வம்ப மள்ளரோ பலரே
எஞ்சுவர் கொல்லோ பகல்தவச் சிறிதே!

-புறம் 79

”தன் பழமையான ஊரின் முன்னர் உள்ள குளிர்குளத்தில் குளித்து, மன்றத்தில் வளர்ந்துள்ள (தன் குடிக்குரிய) வேம்பின் ஒளிமிக்க தளிரை சூடி, முரசம் அதிர்ந்து முன் செல்ல, களிற்றியானையைப் போல நடந்து...” என்ற முன்னுரைகளை விட்டுவிட்டு,

“கொடியபோர் செய்யும் செழியன் வந்துவிட்டான்,
அவனை எதிர்க்கும் மள்ளர் பலர்,
அவருள் சிலர் பிழைக்கலாம் - காரணம்
பகல்பொழுது மிகச் சிறியது!”

என்னும் முடிவுரையைப் பார்த்தோமேயானால், பொழுது சாய்ந்தபின் போர் செய்யாத நெடுஞ்செழியனின் பண்பையும், சிறிய பொழுதிற்குள் பலரை வீழ்த்தும் அவனது ஆற்றலையும் சொல்லலுற்ற புலவர் அழகானதோர் ஹைக்கூவில் அதைச் செய்திருப்பது புலனாகும்!

24 January, 2010

காதல் வாக்கு - கவிதை

குறிப்பு: இந்தக் கவிதை என்னவள் என் காதலுக்கு பதில் சொல்லாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த நிலையில் தோன்றியது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் எழுதியது, தாளில் விழுந்து கெஞ்சாத குறைக்கு தாலில் விழுந்து கெஞ்சியிருக்கிறேன் (அஃதாவது; பாட்டில், தால் - நாக்கு, இங்கே பாட்டை குறித்தது!)இன்று எதையோ தேடுகையில் இது என் கண்களில் பட, நூறு வரிகளுக்கும் மேல் நான் எழுதியிருந்தது என்னையே வியக்க வைத்து இங்கு இடுகையாய் இடம்பெறுகிறது... காப்புரிமைகளைவிட முக்கியமாய் இது காதலுரிமை கட்டுப்பெற்றது, ஆக படிப்பவர்கள் படிப்பதோடு நிறுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் (”சுட்டு விடாதீர்கள்” என்பதே பொருள், கருத்துக்களை தெரிவிக்காமல் இருந்துவிட போகின்றீகள்!) என்னையும் கவிஞனாக்கிய என்னவளுக்கு காணிக்கை!

வாக்களிப்பீர்! வாக்களிப்பீர்!
கன்னி மனதின் காரணங்களே! என்
காதல் கனிந்திட வாக்களிப்பீர்!

வாக்குறுதி பல தந்து
வாக்கு வாங்கும் விளையாட்டல்ல
காதல் என்ற போதும்
களத்தில் இறங்கிவிட்டேன்
களைத்து நான் போகமாட்டேன்!

போட்டியென்று யாருமில்லை!
அன்னபோஸ்டில் வெற்றி யில்லை!
கன்னியவள் கரைய வில்லை, எனக்கோ
காதல் ஓட்டு போடவில்லை!

தேர்தல் இவள் நடத்தவில்லை, என்னை
தேர்ந்தேடுக்க சொல்லுங்கள்,
என் காதல் வாக்குமூலம்தனை
கேட்டுவிட்டு செல்லுங்கள்!

காதலிதன் நெஞ்சமே நீ என்
கனவுதனை அறியாயோ!
காத்திருப்பேன் காத்திருப்பேன், எனக்காய்
கரைந்து வாக்கை இடுவாயோ?

இதயமென்னும் தொகுதியே என்
இனிய ஆட்சி வேண்டாயோ? என்மேல்
இரக்கமின்றி இருக்கின்றாள்,
இவள் சிந்தை மாற செய்வாயோ?

கண்களெனும் மீன்களே, என் பார்வை
கடலில் நீந்தித் திளைத்தீரே!
காதல் தேர்தல் களம் நிற்கின்றேன்
கனிந்து உங்கள் ஓட்டை தாரீரோ!

இதழென்னும் பூவேயுன்
சுவையறியும் இதம் பற்றி
ஐந்தாண்டு திட்டமொன்றும்
அதற்கு மேலும் திட்டம் போட்டேன்,

இறுகி இருந்து கொள்ளாதே,
இவளைப் போல் நீயுமெனை கொல்லாதே!
இன்னும் என்ன நான் கேட்க!
இளகி எனக்கு வாக்கிடுவாய்!

நீங்களெல்லாம் நியாயம் அலசி, வாக்கிட்டு
நான் வெற்றிப் பெற்று ஆட்சியமைக்க
நாட்கள் பல ஆகுமென்றால்,
நேரடியாய் கேட்டுக் கொள்கிறேன்
என் ஆளுனர் என்னவளிடம்...

உன்னைப் பார்த்தவன்று என்னுள்
பரவித்திரிந்த பட்டாம் பூச்சிகளை நீகேள்,
அன்று முதல் இன்றுவரை வளர்ந்த
காதலின் கதையை அவை சொல்லும்!

பொழுது போகவல்ல, எனக்கு
வாழ்ந்து போக வேண்டும் நீ!
கண் நிறைத்துப் போனவள் அல்ல, என்
கருத்தில் நிறைந்து நின்றவள் நீ!

கொஞ்சம் என் தாயாய்,
கொஞ்சம் என் தோழியாய்,
நிறைய என் காதலாய்
நெஞ்சில், வாழ்வில் நிறைய வேண்டும் நீ!

காதல் எனக்கு இல்லையென்று,
கல்யாணம் வீண் தொல்லையென்று
காத்திருப்பவன் கலக்கமுற, நின்
கருத்துரைத்துப் போனாய் நீ...

பகல் உணர்த்தும் இரவாய்,
இரவை உணர்த்தும் பகலாய்,
குளிர் உணர்த்தும் தணலாய்,
தணலை உணர்த்தும் குளிராய்,

என்னை உணர்த்த நீயென்று
உண்மை உணர்ந்து கொள்வாயோ?
காதல் என்னும் கருவி கொண்டு
உன்னை என்னால் உணர்வாயோ!

கணவனாய் இருந்து உனக்கு
காதலை எவ்வாறு தருவேன் என்று
கணக்கிட்டே நான் பட்டியல் தந்தால்
காதல் தேர்தல் ஆகிவிடும்!

ஆனதுதான் ஆகியது,
அதையும் தான் தருகின்றேன்,
கேட்டுவிட்டே என்னவளே, உன்
காதல் ஓட்டை எனக்கேயிடு!

எதை சொல்லி தொடங்க என்
காதல் வாக்கு உறுதிகளை!
இறுதிவரை என்றே நம்பி
இலட்சம் கோடி ஆசைகள் வைத்தேன்!

காலை தொடங்கி மாலை வரை
நித்தம் நூறு பூக்கள் தரவும்,
சத்தம் மின்றி பின்னால் வந்து
முத்தம் நூறா யிரம் தரவும்
திட்டம் போட்ட சின்ன சில்மிஷங்களின்
சட்டம் போட்டே செய்வேன் ஆட்சி!

உன்னோடு கடல் கரை நடக்க,
கண்ணோடு கையும்கோர்த்து மழை நனைய,
கருத்தின்றி பேசியே காலம் கழிக்க,
காதலிக்கிறேன் உன்னை யென்று
காதில் சொல்ல கற்பனை பல வளர்த்தேன்,
கவிதையாய் வாழ, கவிதையோடு வாழ!

குலோத்துங்க சோழன் குலம் ஆராய,
பல்லவன் படையெடுப்பின் பலம் அலச
பாண்டியன் பற்றி யென்று புத்தகம் பல
பார்த்து வைத்துள்ளேன் உன்னோடு சேர்ந்து படிக்க!

பழந்தமிழர் புகழ் படிக்கும் ஆவலொரு
பக்கமென்றால், காதலி உன்னோடிதை
பகிர்வதில் சுகமெனக்கு, உண்மையிதை
பகிர்ந்துவிட்டேன், பொறுத்தருள்வாள் தமிழென்னை!

எனக்கென்றே நான் எண்ணுவதாய்
எண்ணாதே! உறாவாடும் உயிரேயுன்
இலட்சியங்கள் நானறிவேன், அவையாவும்
ஈடேற இடர்களைந்து உடன் நிற்பேன்!

இயன்ற வரை இயம்பிவிட்டேன்,
இன்னும் இன்னும் இருக்கிறது!
கேட்டவரை, கருத்தில் என்
காதல் உனக்கு புரிந்தால்
எனக்கே உன் வாக்கிடு, எனக்காய்
இதய வாசல்தனை திறந்திடு!

இலட்சம் கோடி பேர் இல்லை,
உன் ஒருத்தி ஓட்டு தான் இங்கு,
வெற்றி தோல்வி என்றில்லை,
போட்டி நிற்க ஆளில்லை!

வாக்களிப்பாய் வாழ்க்கைக்கு
இதயத் தொகுதி தேர்தலில்
ஆட்சி எனது
ஆளுமை உனது!

-விஜய்

பின்குறிப்பு: நடந்து முடிந்த இதயத்தேர்தலில் நான் அமோக வாக்குகள் பெற்று வென்றுவிட்டேன் என்பதை வாசகர்களுக்கு மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன் :)

23 January, 2010

ஆயிரத்தில் ஒருவன் - திரைப்பட விமர்சனம்

(படிப்பதானால் முழுமையாய் படித்துவிடுங்கள் - தயவு செய்து!)

தமிழும் நானும்-இல் எழுதும் அளவிற்கு ஒரு தமிழ் திரைப்படம், ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம், தமிழனைத் தலைநிமிர வைக்கும் ஒரு முயற்சி... நிற்க - இவ்வாறெல்லாம் எழுதத்தான் எனக்கு விருப்பம், ஆனால் நாம் விரும்பியதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன?

நான் நேற்றுதான் படத்தை பார்த்தேன், எனக்கு முன் பார்த்தவர்கள் படம் தமிழ வரலாற்றை ஒட்டியது, ஆனால் சொல்லப்பட்டவை புரியவில்லை என்று கூறக்கேட்டபொழுது அவர்களை திட்டினேன் நான் - புரியாமல் எத்தனை ஆங்கிலப் படங்களை பார்க்கிறோம், புரிந்துகொள்ள எத்துனை முயல்கிறோம்? ஒரு தமிழனின் முயற்சிக்கு ஏன் அந்த மதிப்பைத் தரத்தயங்குகின்றோம்? என்று...

படத்தைப் பார்ப்பது, அதன் பெருமையை பறைசாற்றி ஒரு இடுகை இடுவது என்ற முடிவோடே சென்று படத்தைப் பார்த்த எனக்கு பெறுத்த ஏமாற்றம்! மூன்று ஆண்டுகள் உழைத்த படம் போல் துளியும் தெரியவில்லை - நிற்க, இயக்குனர் திரு.செல்வராகவன் மேல் எனக்கு எந்தக் காழ்ப்பும் இருந்ததில்லை, மாறாய் அவரின் இரசிகர்களில் ஒருவன் நான் - எந்தவொரு செய்தியையும் “உணர்வு” என்ற தளத்தில் தீட்டக்கூடிய அற்புதமான செல்லுலாய்டு ஓவியர் அவர் என்று நினைப்பவன் நான் - இந்த எதிர்பார்ப்புகளும் சேர்ந்துதான் என்னை ஏமாறச் செய்தன!

”தமிழன் தன் முன்னோரின் வரலாற்றை, அவரின் வாழ்க்கை முறையை, பெருமைகளை தெரிந்துகொள்வர், இந்தப் படத்தை பார்த்தால்” என்று இயக்குனர் ஒரு பேட்டியில் சொல்லக் கேட்டதாய் நினைவு - தமிழனோ பிறரோ என் வேண்டுகோள் இதுதான் - தயவு செய்து இந்த அரைவேக்காட்டு படத்தை வைத்து தமிழனின் பெருமையை எடைபோட்டு விடாதீர்கள் - அது ஒரு பைத்தியக்காரன் தரையில் வரைந்த நான்கு வளைகோடுகளை வைத்து கடல் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணுவதைப் போலாகிவிடும்!

தமிழ் உலகின் முதல் மொழிகளில் ஒன்று, தமிழன் முதல் மனிதர்களின் ஒருவன்! “செம்மொழி” என்று நாம் நெஞ்சுநிமிர்த்தி உவந்து கொண்டிருக்கும் வேளையில் தமிழனை காட்டுமிராண்டியாய் - கிரேக்க - உரோமானிய சுவடுகளோடும், மந்திர-தந்திரங்களால் வித்தைகாட்டும் மாயன் சுவடுகளோடும் காட்டி தமிழன்னையின் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டான் ஒரு தமிழன்! இந்த மானக்கேட்டின் கோவத்தில்தான் இந்த விமர்சனம் எழுதப்படுகிறது - இது நடுநிலையில் இல்லை என்றாலும் எனக்கு கவலையில்லை - எனது அந்தச் சகதமிழனைப் போல் நானும் இங்கே ஒரு குப்பையை உருவாக்கி வைத்திருக்கிறேன் எனினும் எனக்கு கவலையில்லை!

ஒரு இளைஞன் இரண்டு இளம்பெண்கள், ஒரு பயணத்தில் இவர்களுக்கு இடையில் ஏற்படும் பால்கவர்ச்சி, அதனால் நிகழும் கலவி, புலவி - இதுதான் கதை என்றால் இயக்குனர் அருமையான படத்தை தந்திருப்பார் என்பதில் ஐயமேயில்லை - அதில் அவர் வல்லவரும் கூட - ஆனால் தமிழன்னையின் போதாத காலம், சோழ பாண்டியர்களின் பெயர்கள் இயக்குனரின் நினைவிற்கு வந்து தொலைத்துவிட்டன, அதில்தான் வந்தது சிக்கல்!

மூன்று ஆண்டுகளின் உழைப்பு - எதற்கு இத்துனை காலம்? நாயகிகளின் அங்கங்களை எங்கெங்கு நன்றாய் காட்டலாம் என்று சிந்திக்கவா? எத்துனை தரங்குறைந்த சொற்களை - தமிழின், ஆங்கிலத்தின், இன்னும் பிற வியட்னாம், காட்டுவாசிகள் மொழிகளின் தரங்குறைந்த சொற்களை - எப்படியெப்படி சேர்க்கலாம் என்று ஆராயவா? மூன்று ஆண்டுகளில் சோழ பாண்டியர்களை பற்றி ஒரு மணி நேரமேனும் ஆராய்ந்தனரா? அவர் பெயர் மட்டும் தெரிந்திருந்தால் போதும் என்று இயக்குனர் நினைத்துவிட்டாரா? “இத்திரைப்படத்தில் வருபவை அனைத்தும் கற்பனையே” என்று முகப்பு போட்டுவிட்டால் எதை வேண்டுமானாலும் காட்டலாமா?

சோழன், பாண்டியன் என்னும் பெயர் தவிர்த்து வேறெந்த அம்சமும் அவர்களைப் பற்றி படத்தில் காணப்படவில்லை! “கிளாடியேட்ட்ர்” பாணியில் மைதானத்தில் அப்பாவிகளை அடிமைகளாக்கி கொண்டுவந்து கொல்வது, “300” பாணியில் சோழ அரசன் ஆட்கள் சுமக்கும் ஒரு “மிகப்பெறிய” இருக்கையில் வலம் வருவது, “ட்ராய்” பாணியில் கேடயத்திற்குள் ஒளிந்து போர் செய்வது - இப்படி கிரேக்க - உரோமானிய போர் முறைகளை தமிழனுக்கு ஏத்திவிட்டார் இயக்குனர் - தமிழ போர்முறைகளை சித்தரிக்கும் ஹாலிவுட் படங்கள் இல்லாததுதான் காரணமோ? வெட்சி முதலாய் வாகை ஈறாக எட்டுத்திணைகள் போர்கு வகுத்தவன் தமிழன்!(தன் படத்தில் ஹாலிவுட் படங்களின் சுவடு இருப்பதாய் நிறுவினால் தான் படமெடுப்பதையே விட்டுவிட்டு வேறு தொழில் செய்வதாக இயக்குனர் கூறியுள்ளாராம் - மேலேயுள்ள எடுத்துக்காட்டுகள் போதுமானதாக் இருக்கும், அவர் தன் பட்டப்படிப்பின் சான்றிதழை ஆயத்தம் செய்ய, என்று நினைக்கிறேன்!)

ஒரே தீவில் மழைக்காடுகளும் இருக்கிறது, பாலைவனமும் இருக்கிறது - சோழர்கள் “ஆர்டரின் பேரில் ஆபத்து நிறைந்த தீவுகள் செய்து தரப்படும்” என்று விளம்பரம் செய்யாததுதான் குறை!

தொல்பொருள் ஆய்வாளர் இலாவன்யா (ஆண்ட்ரியா ஜெரோமியா) பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஓலைச்சுவடி தமிழைப் படிக்கும் திறமும், நரமாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகளின் மொழியைப் பேசும் திறமும் வாய்ந்தவர், ஆனால் பாவம் அவரால் சோழ அரசனிடம் அவருக்கு புரியும் தமிழில்தான் பேசவியலவில்லை - என்ன ஒரு சிக்கல்!

எஞ்சியிருக்கும் பாண்டிய சந்ததிகள் இந்திய அரசியல்வாதிகளாய், அதிகாரிகளாய் இருப்பது சரிதான், ஆனால் அவர்களின் “ஆணையில்” இந்திய இராணுவம் செயல்படுவதும், அதுவும் - பெண்களை பாலியல் துன்புறுத்தும், பழங்குடியினரை கண்டபடி சுட்டுத்தள்ளும், அவர்களை அடிமைகளாய் விலங்கிட்டு இழுத்துவரும் வகையில் - அரக்கத்தனமாக, அதுவும் வேறொரு நாட்டில், செயல்படுவதாய் காட்டுவது சரியா? பண்டைய தமிழனின் வீரத்தை இழிவுபடுத்தியதோடு திருப்தி அடையாமல் இன்றைய இந்திய வீரர்களையும் இழிவுபடுத்திவிட்டது ஏன்?

இயக்குனர் என்னதான் சொல்ல முயல்கிறார்? -இந்தக் கேள்விக்கான பதில், படத்தின் ஒரே ஆறுதலான - கடைசி சோழ அரசனின் (இரா.பார்த்திபன்) கதாபாத்திரத்தில் மின்னுகிறது! இந்த ஒரு விதயத்தில் இயக்குனரையும், திரு.இரா.பார்த்திபன் அவர்களையும் எத்துனை பாராட்டினாலும் அது தகும்! ’இவன் சோழன்’ என்று சொன்னால் மறுப்பே சொல்ல இயலாத வகையில் பொருந்துகிறார் நடிகர் இரா.பார்த்திபன் - சோழ அரசனுக்கான மிடுக்கு, தமிழ் வீரனின் துடிப்பு, தாய்நாட்டை பிரிந்து வாடும் ஏக்கம், தம் மக்களின் நிலைக்கு அடையும் துயரம், தூதனை அடையாளம் காணுவதின் குழப்பம், நம்பியவள் ஏமாற்றிவிட்டதின் துன்பம், இறுதி முயற்சியாய் போரிட்டு பார்ப்பதின் முனைப்பு, தன் மனைவியை இழிவுபடுத்துகையில் எழும் சினம், எதிர்ப்பார்ப்போடு கடலை நோக்கி ஓடி வீழ்ந்து இறக்கும் ஒரு பேரரசனின் எச்சத்தின் மிகச்சரியான உருவகமாய் வாழ்ந்து கண்களிலும் நெஞ்சிலும் ஈரத்தை கசியவைத்துவிட்டார்!

இன்று தமிழின், தமிழனின் உண்மை நிலை ஏறத்தாழ இதுதான் - தாய் நாட்டிற்குள்ளேயே நாம் அண்ணியப்பட்டு இருக்கிறோம், நமது பெருமை என்னும் செல்வத்தை இழந்த வறுமையில் வாடுகிறோம், நம்மை நாமே இழிவு படுத்திக்கொள்வதில் தன் இனத்தைத் தானே தின்னும் காட்டுமிராண்டிகளாய் இருக்கிறோம் - இதை காட்டுவதுதான் இயக்குனரின் நோக்கம் என்றால் அவர் நிச்சயம் வென்றிருப்பார் - தமிழ் சினிமாவின் மசாலாத்தனங்களுக்குள் சிக்காமல் இருந்திருந்தால்!

ஆயிரத்தில் ஒருவன் - பத்தோடு பதினொன்று - செல்லுலாய்டு குப்பைகளில்!

பின்குறிப்பு:
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
.” (தி.கு - 664)

மூன்று ஆண்டுகள் உழைத்து எடுத்த ஒரு படத்தை, வெறும் ரூ.90 தந்து பார்த்துவிட்டவன் என்ற முறையில் “குப்பை” என்று நான் விமர்சனம் செய்வது நியாயமில்லைதான், எனினும் ஒரு தனிமனிதனின் பார்வை என்ற வகையில் மட்டுமே இதை பதிக்கிறேன் - தனிமனித கருத்து விருப்பு வெறுப்புகளோடுதான் இருக்கும்!

இந்தத் திரைப்படத்தை வைத்து தயவு செய்து தமிழனை எடைபோட்டுவிடாதீர்கள்!” என்பது மட்டும் நடுநிலையான, நியாயமான கோரிக்கையாக இருக்கும் என்று எண்ணுகிறேன்!

தங்கள் நேரத்தை செலவிட்டு இதைப் படித்தமைக்கு நன்றி!

வாழ்க தமிழ்! வாழ்க ஞாலம்!