28 November, 2009

காலைத் தடுக்கிறது! - ஒரு “பழைய” ஹைக்கூ!

கவிதை என்பது சொற்கோவையின் (யாப்பின்) நுண்டிறத்தை மட்டுமே கொண்டு சிறப்பதில்லை. சரியான சொல் சரியான முறையில் சரியான் இடத்தில் இருப்பது அழகுதான், ஆனால் அதையும் மீறிய அழகையும் ஆழத்தையும் கவிதைக்கு தருவது அதில் பொதிந்துள்ள பொருளேயாம் - தமிழின் பழமையான இலக்கியங்களாய் நமக்கு இன்று கிடைக்கும் “சங்கவிலக்கியங்களை” படிக்கையில் என்னுள்ளத்தே தோன்றும் கருத்து இதுவேயாம்!

கவிதைகளில் எத்துனையோ வகைகள் உள்ளன. தமிழுக்கே செம்மையான யாப்பமைதிகள் பல உள்ளன. வேவ்வேறு மொழிகளின் ஒன்றன்மீதான மற்றொன்றின் தாக்கத்தால் ஒன்றின் மரபு மற்றொன்றில் கலந்து புதுப்புது வகைகள் உருவாகியும் வருகின்றன. அவ்வாறு ஜப்பானிய கவிதை வடிவான ‘ஹைக்கூ’ (Haiku) நம் கவிஞர்களை கவர்ந்து தமிழுக்கும் குடியேரியது. முறையாக சொல்வதென்றால் ஹைக்கூ என்பது பதிணேழு அசைகளில் (syllables) முன்று வரிகளால் யாக்கப்பெற்ற ஒரு குறுங்கவிதை.

ஹைகூவின் சிறப்பே அதன் பொருளமைப்பில்தான் உள்ளது. நம் திருக்குறளை போல அளவில் சிறிதாய் இருந்துகொண்டு பெறிய பொருளை/கருத்தை உள்ளடக்கி யிருக்கும். ஒற்றை பச்சை மிளகாயை நச்சென்று கடித்ததை போல நறுக்கென்றும் இருக்கும், ஒரு நொடியை தன்னுள் உறைய வைத்துக்கொண்ட புகைபடத்தை போல பல செய்திகளை சொல்வதாயும் இருக்கும். இதுதான் ஹைக்கூ. வாழ்வை படிக்க வரும் மாணவனுக்காக ‘ஜென்’ (Zen) ஆசான்கள் வடிவமைத்த உருவு சிறுத்தாலும் காரம் குறையாத கடுகுகளே ஹைக்கூக்கள்.

எல்லாம் சரி, நம் தமிழ் புலவர்களும் ஹைக்கூ எழுதியிருக்கிறார்கள், அதுவும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே, என்றால் நம்புவீர்களா?

இன்றைய வடிவில் அல்ல என்றாலும், ஹைக்கூவிற்கான ‘நறுக்குத்தன்மை’ சிறிதும் குறையாத பாடல்கள் பல நம் சங்கவிலக்கியத்தில் உள்ளன. என் கண்களில் முதலில் பட்டது கீழ்வரும் இந்தப் புறநானூற்றுப் பாடல்தான்:

அதளெறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்மன்
ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே. (புறம் - 193 - ஓரேருழவர்)


பாட்டின் (ஹைக்கூ) பொருள் இதுதான்:

வேடன் துரத்தும் மானைப் போல
ஓடி பிழைத்துவிட முடியுமோ?
காலை தடுக்குமே வாழ்க்கை!


(தெளிவுரை, பதவுரையெல்லாம் வேண்டுமா? ‘நறுக்குத்தன்மை’யை கெடுத்துவிடுவானேன்!)

”ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே” என்ற வரிதான் என்னை மிகவும் கவர்ந்து, இப்பாடலில் பொதிந்துள்ள அந்த அழகிய ஆழமான ஹைக்கூச் சுவடை உணர்த்தியது! புலவர் எத்துனை நன்றாய் வாழ்க்கையின் இயல்பை புரிந்துகொண்டுள்ளார்?...

26 November, 2009

காளமேகம் - ககர கவிதை

வணக்கம் நண்பர்களே...

இன்று பாடல் என்ற பெயரில் பொருளற்ற சொற்களாலும் இரைச்சலான இசையாலும் கருத்தையும் காதையும் கிழிக்கும் பாடல்களோடு சிறிதும் ஒப்பிட இயலாத மீநுந்திறத்தோடு விளங்குபவை நம் தமிழ் இலக்கிய பாடல்கள்.

சொல்லால் பொருளால் பல திறங்களை காட்டிச்சென்றுளனர் நம் புலவர்கள், அவர்களுள் கவி காளமேகம் என்பார் ஓர் ஆசுகவி (எவ்வகை கவியும் விரைந்து பாடவல்லவர்) ஒரே எழுத்தின் வரிசையை வைத்தே பாடல்களை, அதுவும் வெண்பாக்களை, பாடியுள்ளார். அங்ஙணம் அவர் ‘ககர’ வரிசையில் பாடிய பாடலொன்றை கீழே தந்துள்ளேம்.

இதை படித்தபின் இன்றுலவும் சொற்கூளங்களை ”பாடல்” எனவும் மனம் வருமோ?

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.


காக்கைக்கா காகூகை [காக்கைக்கு ஆகா கூகை] - காகத்திற்கு கூகை (ஆந்தை) ஆகாது, இரவில் அது காக்கையை வெல்லும்
கூகைக்கா காகாக்கை [கூகைக்கு ஆகா காக்கை] - கூகைக்கு காகம் ஆகாது, பகலில் இது கூகையை வெல்லும்
கோக்குக்கூக் காக்கைக்குக் [கோக்கு கூ காக்கைக்கு] - கோ [மன்னன்] கூவை [உலகை/ நாட்டை] காக்க வேண்டுமாயின்
கொக்கொக்க [கொக்கு ஒக்க] - கொக்கை போல இருக்க வேண்டும், அஃதாவது கொக்கு தனக்கு இரையாக மீன் சிக்கும் வரை காத்திருப்பதை போல மன்னவன் சரியான நேரம் பார்த்து செயலாற்ற வேண்டும், அவ்வாறு இல்லையென்றால்,
கைக்கைக்கு காக்கைக்கு - கைக்கைக்கு [பகையிடமிருந்து] காப்பதற்கு
கைக்கைக்கா கா [கைக்கு ஐக்கு ஆகா] - ஐக்கு [தலைவனுக்கு] கைக்கு ஆகா [செய்ய இயலாது].


எப்படி...?