குறிப்பு: இந்தக் கவிதை என்னவள் என் காதலுக்கு பதில் சொல்லாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த நிலையில் தோன்றியது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் எழுதியது, தாளில் விழுந்து கெஞ்சாத குறைக்கு தாலில் விழுந்து கெஞ்சியிருக்கிறேன் (அஃதாவது; பாட்டில், தால் - நாக்கு, இங்கே பாட்டை குறித்தது!)இன்று எதையோ தேடுகையில் இது என் கண்களில் பட, நூறு வரிகளுக்கும் மேல் நான் எழுதியிருந்தது என்னையே வியக்க வைத்து இங்கு இடுகையாய் இடம்பெறுகிறது... காப்புரிமைகளைவிட முக்கியமாய் இது காதலுரிமை கட்டுப்பெற்றது, ஆக படிப்பவர்கள் படிப்பதோடு நிறுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் (”சுட்டு விடாதீர்கள்” என்பதே பொருள், கருத்துக்களை தெரிவிக்காமல் இருந்துவிட போகின்றீகள்!) என்னையும் கவிஞனாக்கிய என்னவளுக்கு காணிக்கை!
வாக்களிப்பீர்! வாக்களிப்பீர்!
கன்னி மனதின் காரணங்களே! என்
காதல் கனிந்திட வாக்களிப்பீர்!
வாக்குறுதி பல தந்து
வாக்கு வாங்கும் விளையாட்டல்ல
காதல் என்ற போதும்
களத்தில் இறங்கிவிட்டேன்
களைத்து நான் போகமாட்டேன்!
போட்டியென்று யாருமில்லை!
அன்னபோஸ்டில் வெற்றி யில்லை!
கன்னியவள் கரைய வில்லை, எனக்கோ
காதல் ஓட்டு போடவில்லை!
தேர்தல் இவள் நடத்தவில்லை, என்னை
தேர்ந்தேடுக்க சொல்லுங்கள்,
என் காதல் வாக்குமூலம்தனை
கேட்டுவிட்டு செல்லுங்கள்!
காதலிதன் நெஞ்சமே நீ என்
கனவுதனை அறியாயோ!
காத்திருப்பேன் காத்திருப்பேன், எனக்காய்
கரைந்து வாக்கை இடுவாயோ?
இதயமென்னும் தொகுதியே என்
இனிய ஆட்சி வேண்டாயோ? என்மேல்
இரக்கமின்றி இருக்கின்றாள்,
இவள் சிந்தை மாற செய்வாயோ?
கண்களெனும் மீன்களே, என் பார்வை
கடலில் நீந்தித் திளைத்தீரே!
காதல் தேர்தல் களம் நிற்கின்றேன்
கனிந்து உங்கள் ஓட்டை தாரீரோ!
இதழென்னும் பூவேயுன்
சுவையறியும் இதம் பற்றி
ஐந்தாண்டு திட்டமொன்றும்
அதற்கு மேலும் திட்டம் போட்டேன்,
இறுகி இருந்து கொள்ளாதே,
இவளைப் போல் நீயுமெனை கொல்லாதே!
இன்னும் என்ன நான் கேட்க!
இளகி எனக்கு வாக்கிடுவாய்!
நீங்களெல்லாம் நியாயம் அலசி, வாக்கிட்டு
நான் வெற்றிப் பெற்று ஆட்சியமைக்க
நாட்கள் பல ஆகுமென்றால்,
நேரடியாய் கேட்டுக் கொள்கிறேன்
என் ஆளுனர் என்னவளிடம்...
உன்னைப் பார்த்தவன்று என்னுள்
பரவித்திரிந்த பட்டாம் பூச்சிகளை நீகேள்,
அன்று முதல் இன்றுவரை வளர்ந்த
காதலின் கதையை அவை சொல்லும்!
பொழுது போகவல்ல, எனக்கு
வாழ்ந்து போக வேண்டும் நீ!
கண் நிறைத்துப் போனவள் அல்ல, என்
கருத்தில் நிறைந்து நின்றவள் நீ!
கொஞ்சம் என் தாயாய்,
கொஞ்சம் என் தோழியாய்,
நிறைய என் காதலாய்
நெஞ்சில், வாழ்வில் நிறைய வேண்டும் நீ!
காதல் எனக்கு இல்லையென்று,
கல்யாணம் வீண் தொல்லையென்று
காத்திருப்பவன் கலக்கமுற, நின்
கருத்துரைத்துப் போனாய் நீ...
பகல் உணர்த்தும் இரவாய்,
இரவை உணர்த்தும் பகலாய்,
குளிர் உணர்த்தும் தணலாய்,
தணலை உணர்த்தும் குளிராய்,
என்னை உணர்த்த நீயென்று
உண்மை உணர்ந்து கொள்வாயோ?
காதல் என்னும் கருவி கொண்டு
உன்னை என்னால் உணர்வாயோ!
கணவனாய் இருந்து உனக்கு
காதலை எவ்வாறு தருவேன் என்று
கணக்கிட்டே நான் பட்டியல் தந்தால்
காதல் தேர்தல் ஆகிவிடும்!
ஆனதுதான் ஆகியது,
அதையும் தான் தருகின்றேன்,
கேட்டுவிட்டே என்னவளே, உன்
காதல் ஓட்டை எனக்கேயிடு!
எதை சொல்லி தொடங்க என்
காதல் வாக்கு உறுதிகளை!
இறுதிவரை என்றே நம்பி
இலட்சம் கோடி ஆசைகள் வைத்தேன்!
காலை தொடங்கி மாலை வரை
நித்தம் நூறு பூக்கள் தரவும்,
சத்தம் மின்றி பின்னால் வந்து
முத்தம் நூறா யிரம் தரவும்
திட்டம் போட்ட சின்ன சில்மிஷங்களின்
சட்டம் போட்டே செய்வேன் ஆட்சி!
உன்னோடு கடல் கரை நடக்க,
கண்ணோடு கையும்கோர்த்து மழை நனைய,
கருத்தின்றி பேசியே காலம் கழிக்க,
காதலிக்கிறேன் உன்னை யென்று
காதில் சொல்ல கற்பனை பல வளர்த்தேன்,
கவிதையாய் வாழ, கவிதையோடு வாழ!
குலோத்துங்க சோழன் குலம் ஆராய,
பல்லவன் படையெடுப்பின் பலம் அலச
பாண்டியன் பற்றி யென்று புத்தகம் பல
பார்த்து வைத்துள்ளேன் உன்னோடு சேர்ந்து படிக்க!
பழந்தமிழர் புகழ் படிக்கும் ஆவலொரு
பக்கமென்றால், காதலி உன்னோடிதை
பகிர்வதில் சுகமெனக்கு, உண்மையிதை
பகிர்ந்துவிட்டேன், பொறுத்தருள்வாள் தமிழென்னை!
எனக்கென்றே நான் எண்ணுவதாய்
எண்ணாதே! உறாவாடும் உயிரேயுன்
இலட்சியங்கள் நானறிவேன், அவையாவும்
ஈடேற இடர்களைந்து உடன் நிற்பேன்!
இயன்ற வரை இயம்பிவிட்டேன்,
இன்னும் இன்னும் இருக்கிறது!
கேட்டவரை, கருத்தில் என்
காதல் உனக்கு புரிந்தால்
எனக்கே உன் வாக்கிடு, எனக்காய்
இதய வாசல்தனை திறந்திடு!
இலட்சம் கோடி பேர் இல்லை,
உன் ஒருத்தி ஓட்டு தான் இங்கு,
வெற்றி தோல்வி என்றில்லை,
போட்டி நிற்க ஆளில்லை!
வாக்களிப்பாய் வாழ்க்கைக்கு
இதயத் தொகுதி தேர்தலில்
ஆட்சி எனது
ஆளுமை உனது!
-விஜய்
பின்குறிப்பு: நடந்து முடிந்த இதயத்தேர்தலில் நான் அமோக வாக்குகள் பெற்று வென்றுவிட்டேன் என்பதை வாசகர்களுக்கு மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன் :)
இன்று தமிழ் எனக்கு மிக பிடித்த ஒன்று. ஆனால் என் பள்ளி பருவத்தில் நான் தமிழை மனப்பாடம் செய்யும் ‘எரிச்சலுடனே’தான் படித்தேன் - அதன் பயனாய் இன்றைக்கும் என் தமிழில் ஆங்காங்கு வல்லிணம் மிகுமிடங்களும், ‘ர/ற’ ‘ன/ண’ ‘ல/ள’ வேறுபாட்டு பிழைகளும் அடம்பிடித்து அமரும் - என் தளத்தை படிப்பவர்கள் பொறுத்தருள்வார்களாக! மற்றபடி என்னை தமிழ் கவர்ந்ததன் முறைகளை இங்கே ‘உளற’ போகிறேன் - அதையும், என் ‘கிறுக்கல்களையும்’ படித்து, பொறுத்து அருள்க...
24 January, 2010
23 January, 2010
ஆயிரத்தில் ஒருவன் - திரைப்பட விமர்சனம்
(படிப்பதானால் முழுமையாய் படித்துவிடுங்கள் - தயவு செய்து!)
தமிழும் நானும்-இல் எழுதும் அளவிற்கு ஒரு தமிழ் திரைப்படம், ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம், தமிழனைத் தலைநிமிர வைக்கும் ஒரு முயற்சி... நிற்க - இவ்வாறெல்லாம் எழுதத்தான் எனக்கு விருப்பம், ஆனால் நாம் விரும்பியதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன?
நான் நேற்றுதான் படத்தை பார்த்தேன், எனக்கு முன் பார்த்தவர்கள் படம் தமிழ வரலாற்றை ஒட்டியது, ஆனால் சொல்லப்பட்டவை புரியவில்லை என்று கூறக்கேட்டபொழுது அவர்களை திட்டினேன் நான் - புரியாமல் எத்தனை ஆங்கிலப் படங்களை பார்க்கிறோம், புரிந்துகொள்ள எத்துனை முயல்கிறோம்? ஒரு தமிழனின் முயற்சிக்கு ஏன் அந்த மதிப்பைத் தரத்தயங்குகின்றோம்? என்று...
படத்தைப் பார்ப்பது, அதன் பெருமையை பறைசாற்றி ஒரு இடுகை இடுவது என்ற முடிவோடே சென்று படத்தைப் பார்த்த எனக்கு பெறுத்த ஏமாற்றம்! மூன்று ஆண்டுகள் உழைத்த படம் போல் துளியும் தெரியவில்லை - நிற்க, இயக்குனர் திரு.செல்வராகவன் மேல் எனக்கு எந்தக் காழ்ப்பும் இருந்ததில்லை, மாறாய் அவரின் இரசிகர்களில் ஒருவன் நான் - எந்தவொரு செய்தியையும் “உணர்வு” என்ற தளத்தில் தீட்டக்கூடிய அற்புதமான செல்லுலாய்டு ஓவியர் அவர் என்று நினைப்பவன் நான் - இந்த எதிர்பார்ப்புகளும் சேர்ந்துதான் என்னை ஏமாறச் செய்தன!
”தமிழன் தன் முன்னோரின் வரலாற்றை, அவரின் வாழ்க்கை முறையை, பெருமைகளை தெரிந்துகொள்வர், இந்தப் படத்தை பார்த்தால்” என்று இயக்குனர் ஒரு பேட்டியில் சொல்லக் கேட்டதாய் நினைவு - தமிழனோ பிறரோ என் வேண்டுகோள் இதுதான் - தயவு செய்து இந்த அரைவேக்காட்டு படத்தை வைத்து தமிழனின் பெருமையை எடைபோட்டு விடாதீர்கள் - அது ஒரு பைத்தியக்காரன் தரையில் வரைந்த நான்கு வளைகோடுகளை வைத்து கடல் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணுவதைப் போலாகிவிடும்!
தமிழ் உலகின் முதல் மொழிகளில் ஒன்று, தமிழன் முதல் மனிதர்களின் ஒருவன்! “செம்மொழி” என்று நாம் நெஞ்சுநிமிர்த்தி உவந்து கொண்டிருக்கும் வேளையில் தமிழனை காட்டுமிராண்டியாய் - கிரேக்க - உரோமானிய சுவடுகளோடும், மந்திர-தந்திரங்களால் வித்தைகாட்டும் மாயன் சுவடுகளோடும் காட்டி தமிழன்னையின் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டான் ஒரு தமிழன்! இந்த மானக்கேட்டின் கோவத்தில்தான் இந்த விமர்சனம் எழுதப்படுகிறது - இது நடுநிலையில் இல்லை என்றாலும் எனக்கு கவலையில்லை - எனது அந்தச் சகதமிழனைப் போல் நானும் இங்கே ஒரு குப்பையை உருவாக்கி வைத்திருக்கிறேன் எனினும் எனக்கு கவலையில்லை!
ஒரு இளைஞன் இரண்டு இளம்பெண்கள், ஒரு பயணத்தில் இவர்களுக்கு இடையில் ஏற்படும் பால்கவர்ச்சி, அதனால் நிகழும் கலவி, புலவி - இதுதான் கதை என்றால் இயக்குனர் அருமையான படத்தை தந்திருப்பார் என்பதில் ஐயமேயில்லை - அதில் அவர் வல்லவரும் கூட - ஆனால் தமிழன்னையின் போதாத காலம், சோழ பாண்டியர்களின் பெயர்கள் இயக்குனரின் நினைவிற்கு வந்து தொலைத்துவிட்டன, அதில்தான் வந்தது சிக்கல்!
மூன்று ஆண்டுகளின் உழைப்பு - எதற்கு இத்துனை காலம்? நாயகிகளின் அங்கங்களை எங்கெங்கு நன்றாய் காட்டலாம் என்று சிந்திக்கவா? எத்துனை தரங்குறைந்த சொற்களை - தமிழின், ஆங்கிலத்தின், இன்னும் பிற வியட்னாம், காட்டுவாசிகள் மொழிகளின் தரங்குறைந்த சொற்களை - எப்படியெப்படி சேர்க்கலாம் என்று ஆராயவா? மூன்று ஆண்டுகளில் சோழ பாண்டியர்களை பற்றி ஒரு மணி நேரமேனும் ஆராய்ந்தனரா? அவர் பெயர் மட்டும் தெரிந்திருந்தால் போதும் என்று இயக்குனர் நினைத்துவிட்டாரா? “இத்திரைப்படத்தில் வருபவை அனைத்தும் கற்பனையே” என்று முகப்பு போட்டுவிட்டால் எதை வேண்டுமானாலும் காட்டலாமா?
சோழன், பாண்டியன் என்னும் பெயர் தவிர்த்து வேறெந்த அம்சமும் அவர்களைப் பற்றி படத்தில் காணப்படவில்லை! “கிளாடியேட்ட்ர்” பாணியில் மைதானத்தில் அப்பாவிகளை அடிமைகளாக்கி கொண்டுவந்து கொல்வது, “300” பாணியில் சோழ அரசன் ஆட்கள் சுமக்கும் ஒரு “மிகப்பெறிய” இருக்கையில் வலம் வருவது, “ட்ராய்” பாணியில் கேடயத்திற்குள் ஒளிந்து போர் செய்வது - இப்படி கிரேக்க - உரோமானிய போர் முறைகளை தமிழனுக்கு ஏத்திவிட்டார் இயக்குனர் - தமிழ போர்முறைகளை சித்தரிக்கும் ஹாலிவுட் படங்கள் இல்லாததுதான் காரணமோ? வெட்சி முதலாய் வாகை ஈறாக எட்டுத்திணைகள் போர்கு வகுத்தவன் தமிழன்!(தன் படத்தில் ஹாலிவுட் படங்களின் சுவடு இருப்பதாய் நிறுவினால் தான் படமெடுப்பதையே விட்டுவிட்டு வேறு தொழில் செய்வதாக இயக்குனர் கூறியுள்ளாராம் - மேலேயுள்ள எடுத்துக்காட்டுகள் போதுமானதாக் இருக்கும், அவர் தன் பட்டப்படிப்பின் சான்றிதழை ஆயத்தம் செய்ய, என்று நினைக்கிறேன்!)
ஒரே தீவில் மழைக்காடுகளும் இருக்கிறது, பாலைவனமும் இருக்கிறது - சோழர்கள் “ஆர்டரின் பேரில் ஆபத்து நிறைந்த தீவுகள் செய்து தரப்படும்” என்று விளம்பரம் செய்யாததுதான் குறை!
தொல்பொருள் ஆய்வாளர் இலாவன்யா (ஆண்ட்ரியா ஜெரோமியா) பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஓலைச்சுவடி தமிழைப் படிக்கும் திறமும், நரமாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகளின் மொழியைப் பேசும் திறமும் வாய்ந்தவர், ஆனால் பாவம் அவரால் சோழ அரசனிடம் அவருக்கு புரியும் தமிழில்தான் பேசவியலவில்லை - என்ன ஒரு சிக்கல்!
எஞ்சியிருக்கும் பாண்டிய சந்ததிகள் இந்திய அரசியல்வாதிகளாய், அதிகாரிகளாய் இருப்பது சரிதான், ஆனால் அவர்களின் “ஆணையில்” இந்திய இராணுவம் செயல்படுவதும், அதுவும் - பெண்களை பாலியல் துன்புறுத்தும், பழங்குடியினரை கண்டபடி சுட்டுத்தள்ளும், அவர்களை அடிமைகளாய் விலங்கிட்டு இழுத்துவரும் வகையில் - அரக்கத்தனமாக, அதுவும் வேறொரு நாட்டில், செயல்படுவதாய் காட்டுவது சரியா? பண்டைய தமிழனின் வீரத்தை இழிவுபடுத்தியதோடு திருப்தி அடையாமல் இன்றைய இந்திய வீரர்களையும் இழிவுபடுத்திவிட்டது ஏன்?
இயக்குனர் என்னதான் சொல்ல முயல்கிறார்? -இந்தக் கேள்விக்கான பதில், படத்தின் ஒரே ஆறுதலான - கடைசி சோழ அரசனின் (இரா.பார்த்திபன்) கதாபாத்திரத்தில் மின்னுகிறது! இந்த ஒரு விதயத்தில் இயக்குனரையும், திரு.இரா.பார்த்திபன் அவர்களையும் எத்துனை பாராட்டினாலும் அது தகும்! ’இவன் சோழன்’ என்று சொன்னால் மறுப்பே சொல்ல இயலாத வகையில் பொருந்துகிறார் நடிகர் இரா.பார்த்திபன் - சோழ அரசனுக்கான மிடுக்கு, தமிழ் வீரனின் துடிப்பு, தாய்நாட்டை பிரிந்து வாடும் ஏக்கம், தம் மக்களின் நிலைக்கு அடையும் துயரம், தூதனை அடையாளம் காணுவதின் குழப்பம், நம்பியவள் ஏமாற்றிவிட்டதின் துன்பம், இறுதி முயற்சியாய் போரிட்டு பார்ப்பதின் முனைப்பு, தன் மனைவியை இழிவுபடுத்துகையில் எழும் சினம், எதிர்ப்பார்ப்போடு கடலை நோக்கி ஓடி வீழ்ந்து இறக்கும் ஒரு பேரரசனின் எச்சத்தின் மிகச்சரியான உருவகமாய் வாழ்ந்து கண்களிலும் நெஞ்சிலும் ஈரத்தை கசியவைத்துவிட்டார்!
இன்று தமிழின், தமிழனின் உண்மை நிலை ஏறத்தாழ இதுதான் - தாய் நாட்டிற்குள்ளேயே நாம் அண்ணியப்பட்டு இருக்கிறோம், நமது பெருமை என்னும் செல்வத்தை இழந்த வறுமையில் வாடுகிறோம், நம்மை நாமே இழிவு படுத்திக்கொள்வதில் தன் இனத்தைத் தானே தின்னும் காட்டுமிராண்டிகளாய் இருக்கிறோம் - இதை காட்டுவதுதான் இயக்குனரின் நோக்கம் என்றால் அவர் நிச்சயம் வென்றிருப்பார் - தமிழ் சினிமாவின் மசாலாத்தனங்களுக்குள் சிக்காமல் இருந்திருந்தால்!
ஆயிரத்தில் ஒருவன் - பத்தோடு பதினொன்று - செல்லுலாய்டு குப்பைகளில்!
பின்குறிப்பு:
”சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.” (தி.கு - 664)
மூன்று ஆண்டுகள் உழைத்து எடுத்த ஒரு படத்தை, வெறும் ரூ.90 தந்து பார்த்துவிட்டவன் என்ற முறையில் “குப்பை” என்று நான் விமர்சனம் செய்வது நியாயமில்லைதான், எனினும் ஒரு தனிமனிதனின் பார்வை என்ற வகையில் மட்டுமே இதை பதிக்கிறேன் - தனிமனித கருத்து விருப்பு வெறுப்புகளோடுதான் இருக்கும்!
”இந்தத் திரைப்படத்தை வைத்து தயவு செய்து தமிழனை எடைபோட்டுவிடாதீர்கள்!” என்பது மட்டும் நடுநிலையான, நியாயமான கோரிக்கையாக இருக்கும் என்று எண்ணுகிறேன்!
தங்கள் நேரத்தை செலவிட்டு இதைப் படித்தமைக்கு நன்றி!
வாழ்க தமிழ்! வாழ்க ஞாலம்!
தமிழும் நானும்-இல் எழுதும் அளவிற்கு ஒரு தமிழ் திரைப்படம், ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம், தமிழனைத் தலைநிமிர வைக்கும் ஒரு முயற்சி... நிற்க - இவ்வாறெல்லாம் எழுதத்தான் எனக்கு விருப்பம், ஆனால் நாம் விரும்பியதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன?
நான் நேற்றுதான் படத்தை பார்த்தேன், எனக்கு முன் பார்த்தவர்கள் படம் தமிழ வரலாற்றை ஒட்டியது, ஆனால் சொல்லப்பட்டவை புரியவில்லை என்று கூறக்கேட்டபொழுது அவர்களை திட்டினேன் நான் - புரியாமல் எத்தனை ஆங்கிலப் படங்களை பார்க்கிறோம், புரிந்துகொள்ள எத்துனை முயல்கிறோம்? ஒரு தமிழனின் முயற்சிக்கு ஏன் அந்த மதிப்பைத் தரத்தயங்குகின்றோம்? என்று...
படத்தைப் பார்ப்பது, அதன் பெருமையை பறைசாற்றி ஒரு இடுகை இடுவது என்ற முடிவோடே சென்று படத்தைப் பார்த்த எனக்கு பெறுத்த ஏமாற்றம்! மூன்று ஆண்டுகள் உழைத்த படம் போல் துளியும் தெரியவில்லை - நிற்க, இயக்குனர் திரு.செல்வராகவன் மேல் எனக்கு எந்தக் காழ்ப்பும் இருந்ததில்லை, மாறாய் அவரின் இரசிகர்களில் ஒருவன் நான் - எந்தவொரு செய்தியையும் “உணர்வு” என்ற தளத்தில் தீட்டக்கூடிய அற்புதமான செல்லுலாய்டு ஓவியர் அவர் என்று நினைப்பவன் நான் - இந்த எதிர்பார்ப்புகளும் சேர்ந்துதான் என்னை ஏமாறச் செய்தன!
”தமிழன் தன் முன்னோரின் வரலாற்றை, அவரின் வாழ்க்கை முறையை, பெருமைகளை தெரிந்துகொள்வர், இந்தப் படத்தை பார்த்தால்” என்று இயக்குனர் ஒரு பேட்டியில் சொல்லக் கேட்டதாய் நினைவு - தமிழனோ பிறரோ என் வேண்டுகோள் இதுதான் - தயவு செய்து இந்த அரைவேக்காட்டு படத்தை வைத்து தமிழனின் பெருமையை எடைபோட்டு விடாதீர்கள் - அது ஒரு பைத்தியக்காரன் தரையில் வரைந்த நான்கு வளைகோடுகளை வைத்து கடல் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணுவதைப் போலாகிவிடும்!
தமிழ் உலகின் முதல் மொழிகளில் ஒன்று, தமிழன் முதல் மனிதர்களின் ஒருவன்! “செம்மொழி” என்று நாம் நெஞ்சுநிமிர்த்தி உவந்து கொண்டிருக்கும் வேளையில் தமிழனை காட்டுமிராண்டியாய் - கிரேக்க - உரோமானிய சுவடுகளோடும், மந்திர-தந்திரங்களால் வித்தைகாட்டும் மாயன் சுவடுகளோடும் காட்டி தமிழன்னையின் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டான் ஒரு தமிழன்! இந்த மானக்கேட்டின் கோவத்தில்தான் இந்த விமர்சனம் எழுதப்படுகிறது - இது நடுநிலையில் இல்லை என்றாலும் எனக்கு கவலையில்லை - எனது அந்தச் சகதமிழனைப் போல் நானும் இங்கே ஒரு குப்பையை உருவாக்கி வைத்திருக்கிறேன் எனினும் எனக்கு கவலையில்லை!
ஒரு இளைஞன் இரண்டு இளம்பெண்கள், ஒரு பயணத்தில் இவர்களுக்கு இடையில் ஏற்படும் பால்கவர்ச்சி, அதனால் நிகழும் கலவி, புலவி - இதுதான் கதை என்றால் இயக்குனர் அருமையான படத்தை தந்திருப்பார் என்பதில் ஐயமேயில்லை - அதில் அவர் வல்லவரும் கூட - ஆனால் தமிழன்னையின் போதாத காலம், சோழ பாண்டியர்களின் பெயர்கள் இயக்குனரின் நினைவிற்கு வந்து தொலைத்துவிட்டன, அதில்தான் வந்தது சிக்கல்!
மூன்று ஆண்டுகளின் உழைப்பு - எதற்கு இத்துனை காலம்? நாயகிகளின் அங்கங்களை எங்கெங்கு நன்றாய் காட்டலாம் என்று சிந்திக்கவா? எத்துனை தரங்குறைந்த சொற்களை - தமிழின், ஆங்கிலத்தின், இன்னும் பிற வியட்னாம், காட்டுவாசிகள் மொழிகளின் தரங்குறைந்த சொற்களை - எப்படியெப்படி சேர்க்கலாம் என்று ஆராயவா? மூன்று ஆண்டுகளில் சோழ பாண்டியர்களை பற்றி ஒரு மணி நேரமேனும் ஆராய்ந்தனரா? அவர் பெயர் மட்டும் தெரிந்திருந்தால் போதும் என்று இயக்குனர் நினைத்துவிட்டாரா? “இத்திரைப்படத்தில் வருபவை அனைத்தும் கற்பனையே” என்று முகப்பு போட்டுவிட்டால் எதை வேண்டுமானாலும் காட்டலாமா?
சோழன், பாண்டியன் என்னும் பெயர் தவிர்த்து வேறெந்த அம்சமும் அவர்களைப் பற்றி படத்தில் காணப்படவில்லை! “கிளாடியேட்ட்ர்” பாணியில் மைதானத்தில் அப்பாவிகளை அடிமைகளாக்கி கொண்டுவந்து கொல்வது, “300” பாணியில் சோழ அரசன் ஆட்கள் சுமக்கும் ஒரு “மிகப்பெறிய” இருக்கையில் வலம் வருவது, “ட்ராய்” பாணியில் கேடயத்திற்குள் ஒளிந்து போர் செய்வது - இப்படி கிரேக்க - உரோமானிய போர் முறைகளை தமிழனுக்கு ஏத்திவிட்டார் இயக்குனர் - தமிழ போர்முறைகளை சித்தரிக்கும் ஹாலிவுட் படங்கள் இல்லாததுதான் காரணமோ? வெட்சி முதலாய் வாகை ஈறாக எட்டுத்திணைகள் போர்கு வகுத்தவன் தமிழன்!(தன் படத்தில் ஹாலிவுட் படங்களின் சுவடு இருப்பதாய் நிறுவினால் தான் படமெடுப்பதையே விட்டுவிட்டு வேறு தொழில் செய்வதாக இயக்குனர் கூறியுள்ளாராம் - மேலேயுள்ள எடுத்துக்காட்டுகள் போதுமானதாக் இருக்கும், அவர் தன் பட்டப்படிப்பின் சான்றிதழை ஆயத்தம் செய்ய, என்று நினைக்கிறேன்!)
ஒரே தீவில் மழைக்காடுகளும் இருக்கிறது, பாலைவனமும் இருக்கிறது - சோழர்கள் “ஆர்டரின் பேரில் ஆபத்து நிறைந்த தீவுகள் செய்து தரப்படும்” என்று விளம்பரம் செய்யாததுதான் குறை!
தொல்பொருள் ஆய்வாளர் இலாவன்யா (ஆண்ட்ரியா ஜெரோமியா) பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஓலைச்சுவடி தமிழைப் படிக்கும் திறமும், நரமாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகளின் மொழியைப் பேசும் திறமும் வாய்ந்தவர், ஆனால் பாவம் அவரால் சோழ அரசனிடம் அவருக்கு புரியும் தமிழில்தான் பேசவியலவில்லை - என்ன ஒரு சிக்கல்!
எஞ்சியிருக்கும் பாண்டிய சந்ததிகள் இந்திய அரசியல்வாதிகளாய், அதிகாரிகளாய் இருப்பது சரிதான், ஆனால் அவர்களின் “ஆணையில்” இந்திய இராணுவம் செயல்படுவதும், அதுவும் - பெண்களை பாலியல் துன்புறுத்தும், பழங்குடியினரை கண்டபடி சுட்டுத்தள்ளும், அவர்களை அடிமைகளாய் விலங்கிட்டு இழுத்துவரும் வகையில் - அரக்கத்தனமாக, அதுவும் வேறொரு நாட்டில், செயல்படுவதாய் காட்டுவது சரியா? பண்டைய தமிழனின் வீரத்தை இழிவுபடுத்தியதோடு திருப்தி அடையாமல் இன்றைய இந்திய வீரர்களையும் இழிவுபடுத்திவிட்டது ஏன்?
இயக்குனர் என்னதான் சொல்ல முயல்கிறார்? -இந்தக் கேள்விக்கான பதில், படத்தின் ஒரே ஆறுதலான - கடைசி சோழ அரசனின் (இரா.பார்த்திபன்) கதாபாத்திரத்தில் மின்னுகிறது! இந்த ஒரு விதயத்தில் இயக்குனரையும், திரு.இரா.பார்த்திபன் அவர்களையும் எத்துனை பாராட்டினாலும் அது தகும்! ’இவன் சோழன்’ என்று சொன்னால் மறுப்பே சொல்ல இயலாத வகையில் பொருந்துகிறார் நடிகர் இரா.பார்த்திபன் - சோழ அரசனுக்கான மிடுக்கு, தமிழ் வீரனின் துடிப்பு, தாய்நாட்டை பிரிந்து வாடும் ஏக்கம், தம் மக்களின் நிலைக்கு அடையும் துயரம், தூதனை அடையாளம் காணுவதின் குழப்பம், நம்பியவள் ஏமாற்றிவிட்டதின் துன்பம், இறுதி முயற்சியாய் போரிட்டு பார்ப்பதின் முனைப்பு, தன் மனைவியை இழிவுபடுத்துகையில் எழும் சினம், எதிர்ப்பார்ப்போடு கடலை நோக்கி ஓடி வீழ்ந்து இறக்கும் ஒரு பேரரசனின் எச்சத்தின் மிகச்சரியான உருவகமாய் வாழ்ந்து கண்களிலும் நெஞ்சிலும் ஈரத்தை கசியவைத்துவிட்டார்!
இன்று தமிழின், தமிழனின் உண்மை நிலை ஏறத்தாழ இதுதான் - தாய் நாட்டிற்குள்ளேயே நாம் அண்ணியப்பட்டு இருக்கிறோம், நமது பெருமை என்னும் செல்வத்தை இழந்த வறுமையில் வாடுகிறோம், நம்மை நாமே இழிவு படுத்திக்கொள்வதில் தன் இனத்தைத் தானே தின்னும் காட்டுமிராண்டிகளாய் இருக்கிறோம் - இதை காட்டுவதுதான் இயக்குனரின் நோக்கம் என்றால் அவர் நிச்சயம் வென்றிருப்பார் - தமிழ் சினிமாவின் மசாலாத்தனங்களுக்குள் சிக்காமல் இருந்திருந்தால்!
ஆயிரத்தில் ஒருவன் - பத்தோடு பதினொன்று - செல்லுலாய்டு குப்பைகளில்!
பின்குறிப்பு:
”சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.” (தி.கு - 664)
மூன்று ஆண்டுகள் உழைத்து எடுத்த ஒரு படத்தை, வெறும் ரூ.90 தந்து பார்த்துவிட்டவன் என்ற முறையில் “குப்பை” என்று நான் விமர்சனம் செய்வது நியாயமில்லைதான், எனினும் ஒரு தனிமனிதனின் பார்வை என்ற வகையில் மட்டுமே இதை பதிக்கிறேன் - தனிமனித கருத்து விருப்பு வெறுப்புகளோடுதான் இருக்கும்!
”இந்தத் திரைப்படத்தை வைத்து தயவு செய்து தமிழனை எடைபோட்டுவிடாதீர்கள்!” என்பது மட்டும் நடுநிலையான, நியாயமான கோரிக்கையாக இருக்கும் என்று எண்ணுகிறேன்!
தங்கள் நேரத்தை செலவிட்டு இதைப் படித்தமைக்கு நன்றி!
வாழ்க தமிழ்! வாழ்க ஞாலம்!
Subscribe to:
Posts (Atom)