Showing posts with label சங்கவிலக்கியம். Show all posts
Showing posts with label சங்கவிலக்கியம். Show all posts

08 February, 2010

பகல்தவச் சிறிதே - பழைய ஹைக்கூ 2

ஹைக்கூ ஒரு அழகான கவிதை வடிவம் - ”வடிவம்” என்ற பொழுதிலும் ஹைக்கூவின் சுவை அதன் யாப்பைவிட அதில் சொல்லப்பட்ட பொருளிலேயே பெரும்பான்மை உள்ளது - இதை இன்றைய ஹைக்கூ புனைஞர்கள் (என்னையும் சேர்த்துதான்) இன்னும் முழுதாய் புரிந்து கொள்ளவில்லை என்பதே என் கருத்து!

ஒரு நல்ல ஹைக்கூ படிபவரின் எண்ணவோட்டத்தை தடுத்து நிறுத்தி, அதனை ஒருமுகப்படுத்தி சீராக்கும் - இதற்கு அந்த ஹைக்கூவின் சொற்கோவை (யாப்பு) சிறிது உதவுமென்றால், பெரிதும் உதவுவது அதன் பொருளமைதியே - உலகின் இயல்புகளை, அதன் மெய்ப்பொருட்களை உரைக்கையில்தான் இந்த தடுத்துச்சீராக்கல் இயலும் - இந்தவகையில் நம் பழைய (குறிப்பாய் சங்க) இலக்கியங்களின் “பொருண்மொழிக் காஞ்சி”, “முதுமொழிக் காஞ்சி”, “செவியறிவுறூஉ” போன்ற துறைகள் உலகின் இயல்பை எடுத்துச் சொல்வதில் ஹைக்கூக்களை ஒத்து இருக்கின்றன (ஆனால் சற்றே பெரிதாய்!) இவற்றின் பொருளின் சாரத்தில் ஹைக்கூக்களைக் காண்பது எளிது (இதையும் காண்க).

ஆனால், அரசனைப் புகழும் “வாகை” பாட்டில் ஒரு ஹைக்கூவை அழகாய் பொதிந்துள்ளார் இடைக்குன்றூர் கிழார்!

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் போர் திறத்தை இவ்வாறு புகழ்கிறார் அவர்,

மூதூர் வாயில் பனிக்கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து
தெண்கிணை மன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன் எதிர்த்த
வம்ப மள்ளரோ பலரே
எஞ்சுவர் கொல்லோ பகல்தவச் சிறிதே!

-புறம் 79

”தன் பழமையான ஊரின் முன்னர் உள்ள குளிர்குளத்தில் குளித்து, மன்றத்தில் வளர்ந்துள்ள (தன் குடிக்குரிய) வேம்பின் ஒளிமிக்க தளிரை சூடி, முரசம் அதிர்ந்து முன் செல்ல, களிற்றியானையைப் போல நடந்து...” என்ற முன்னுரைகளை விட்டுவிட்டு,

“கொடியபோர் செய்யும் செழியன் வந்துவிட்டான்,
அவனை எதிர்க்கும் மள்ளர் பலர்,
அவருள் சிலர் பிழைக்கலாம் - காரணம்
பகல்பொழுது மிகச் சிறியது!”

என்னும் முடிவுரையைப் பார்த்தோமேயானால், பொழுது சாய்ந்தபின் போர் செய்யாத நெடுஞ்செழியனின் பண்பையும், சிறிய பொழுதிற்குள் பலரை வீழ்த்தும் அவனது ஆற்றலையும் சொல்லலுற்ற புலவர் அழகானதோர் ஹைக்கூவில் அதைச் செய்திருப்பது புலனாகும்!

04 December, 2009

நடுக்கமும் நகையும்!

சமுதாயத்தில் ஆண்கள் பெண்களை எத்தனையோ படுத்துகின்றனர், உண்மைதான்! ஆனால், காதல் என்று வந்துவிட்டால் பெண்களிடம் ஆண்கள் மாட்டிக்கொண்டு திண்டாடுவதுதான் நடக்கிறது! ‘ஓ...! இவன் காதலி இவனைப் போட்டுப் படுத்தியெடுக்குறாப் போல!’ -என்று நினைத்து விடாதீர்கள் (அது உண்மையே என்றாலும், அதை இங்கு சொல்லி, அவள் படித்துவிட்டால் பிறகு என் நிலை என்னாவது - அதனால் அதற்கெல்லாம் நாம் செல்ல வேண்டாம்!) ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு ஒரு காதலன் பட்ட பாட்டை சொல்லவே யாம் முனைகிறோம்....

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பா? எனின், சங்க காலத்திலா? புலியோடும் யானையோடும் போரிட்ட வீரத்தமிழனா காதலியிடம் பாடுபட்டான்?... - உங்கள் ஐயம் புரிகிறது!

தமிழன் வீரனேதான்! அவன் (தலைவன்) புலியோடு சண்டையிட்டுக் கொண்டே இருந்திருக்கலாம், குறிஞ்சியில் ஒருத்தியை (தலைவி) காதலித்து மணந்து கொண்டு மருதத்தில் வேறொருத்தியிடமும் (காதற்பரத்தை) சிக்கியிருக்கிறான்... அதனால் வந்த வினை!

காதல் பொங்க பரத்தையை, அவளது மணமிக்க கூந்தலைப் பற்றி, தன்பக்கம் இழுத்துத் தன்மடியில் அவளை அமர வைத்து, மிக்க வேலைபாடுள்ள அவளது கைவளைகளைக் கழட்டிக் (காதல் விளையாட்டு) விளையாடியுள்ளான்... பிறகு விதி விளையாடியிருக்கிறது - காதற்பரத்தையும் ஊடலை மேற்கொண்டுவிட்டாள்!

அந்தக் கோவத்தில் அவள் “அன்று நீ என்னை மடியில் வைத்து என் கைவளைகள்க் கழட்டிய விளையாட்டை உன் மனைவியிடம் போய் சொல்கிறேன் பார்” என்று சொன்னதுதான் தாமதம், தலைவனின் உடல் - பகைவர்களின் ஆநிரைகளை தன் வில்லின் திறத்தால் வென்று வந்து இரவலர்களுக்குப் பரிசாகத் தரும் மலையமான் திருமுடிக்காரி-யின் முன்னிலையில் வேற்றுனாட்டுக் கூத்தர் முழக்கும் மத்தளத்தின் மண் வைத்தப் பக்கத்தைப் போல் - நடுங்கியதாம்! இதைத் தன் தோழியிடம் கூறி நகைக்கிறாள் அந்தப் பரத்தை - “அதை நினைக்கும் பொழுதெல்லாம் நான் நகுகிறேன்!” என்று...

உள்ளுதொறும் நகுவேன் தோழி! வள்ளுகிர்
மாரிக் கொக்கின் கூரல் அன்ன
குண்டுநீர் ஆம்பல் தண்துறை ஊரன்
தேங்கமழ் ஐம்பால் பற்றி என்வயின்
வான்கோல் எல்வளை வௌவிய பூசல்
சினவிய முகத்து ‘சினவாது சென்றுநின்
மனையோட்கு உரைப்பல்’ என்றலின் முனைஊர்ப்
பல்ஆ நெடுநிரை வில்லின் ஒய்யும்
தேர்வண் மலையன் முந்தை பேர்இசைப்
புலம்புரி வயிரியர் நலம்புரி முழவின்
மண்ஆர் கண்ணின் அதிரும்
நன்னராளன் நடுங்கு அஞர் நிலையே!
[பரணர் - நற்றிணை - 100 மருதம்]


(தோழி! அதை நினைக்கும் போதெல்லாம் நான் நகுவேன்!

பெரிய நகமுடைய மழைக்கொக்கின் கூம்பலைப் போல ஆம்பல் மலரும் ஆழமான குளத்தினை உடைய குளிர்ந்த துறை உடைய ஊரன் தேன்மணம் கமழும் என் ஐந்து திறப்பட்ட கூந்தலை பற்றி இழுத்து தன் மடியில் என்னை அமரவைத்து மிகச்சிறந்த வேலைபாடமைந்த ஒளிபொருந்திய என் கைவளைகளை கழற்றி விளையாடிய பூசலை, இப்போது கோவத்துடன் நான் சென்று ”என் கோவத்தைக் காட்டாது உன் மனையாளுக்கு உரைப்பேன்” என்று சொன்னவுடன் - பகைவரின் ஊருக்கு முனையிலே (வெளியிலே) பலவாக திரண்ட ஆநிரைகளைத் தன் வில்லின் திறத்தால் கவர்ந்துவந்து அவற்றை இரவலர்களுக்குக் கொடையாக அளிக்கும் மலையமான் திருமுடிக்காரி என்பவனது முன்னர் வேற்றுநாட்டுக் கூத்தர் பரிசில் பெறுவதற்காக முழக்கும் மத்தளத்தின் மண்வைத்தப் பக்கம் அதிர்வதைப் போல இருந்தது - நன்மையை செய்பவரான அவரது உடலின் நடுக்கம்!)


’என் கோவத்தைக் காட்டாது சொல்வேன்’ என்றது, தான் கோவமாய் இருப்பது தெரிந்தால் தலைவன் மீது வேண்டுமென்றே புனைந்துரைப்பதாய் தலைவி நினைத்துத் தலைவனை சினவாது விட்டுவிடுவாள் என்பதினால்! அதனின் பரத்தை கூற்றைக் கேட்பின் தலைவி முனிவாள் என்பது உறுதியாக, அதை நினைக்கையிலேயே தலைவனுக்கு உடல் நடுங்குகிறது!

”என் இடம்தான் வீரமாய் பேசுவான், தன் மகனின் தாயிடம் (மனைவியிடம்) கண்ணாடியில் தெரியும் பாவையைப் போல அவள் ஆட்டுவிக்கும் வண்ணம் இவனும் ஆடுவான்!” என்று (குறுந்தொகையில் எட்டாம் பாடலில்) பரத்தை கூறுவதை உணர்ந்தால் தலைவனின் உடல் நடுங்கியதன் பொருளையும் உணரலாம்!

ஆக, இந்த இருபெண்களும் அவனை என்னமாய் ஆட்டுவிக்கின்றனர்! ஆனாலும் அவன் மீண்டும் அவர்களிடமே செல்வதைப் பார்க்கையில்,

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து (குறள் - 1102)


- என்று வள்ளுவர் உரைத்ததற்கு புதிய பொருள் கிடைக்கிறதன்றோ?...

28 November, 2009

காலைத் தடுக்கிறது! - ஒரு “பழைய” ஹைக்கூ!

கவிதை என்பது சொற்கோவையின் (யாப்பின்) நுண்டிறத்தை மட்டுமே கொண்டு சிறப்பதில்லை. சரியான சொல் சரியான முறையில் சரியான் இடத்தில் இருப்பது அழகுதான், ஆனால் அதையும் மீறிய அழகையும் ஆழத்தையும் கவிதைக்கு தருவது அதில் பொதிந்துள்ள பொருளேயாம் - தமிழின் பழமையான இலக்கியங்களாய் நமக்கு இன்று கிடைக்கும் “சங்கவிலக்கியங்களை” படிக்கையில் என்னுள்ளத்தே தோன்றும் கருத்து இதுவேயாம்!

கவிதைகளில் எத்துனையோ வகைகள் உள்ளன. தமிழுக்கே செம்மையான யாப்பமைதிகள் பல உள்ளன. வேவ்வேறு மொழிகளின் ஒன்றன்மீதான மற்றொன்றின் தாக்கத்தால் ஒன்றின் மரபு மற்றொன்றில் கலந்து புதுப்புது வகைகள் உருவாகியும் வருகின்றன. அவ்வாறு ஜப்பானிய கவிதை வடிவான ‘ஹைக்கூ’ (Haiku) நம் கவிஞர்களை கவர்ந்து தமிழுக்கும் குடியேரியது. முறையாக சொல்வதென்றால் ஹைக்கூ என்பது பதிணேழு அசைகளில் (syllables) முன்று வரிகளால் யாக்கப்பெற்ற ஒரு குறுங்கவிதை.

ஹைகூவின் சிறப்பே அதன் பொருளமைப்பில்தான் உள்ளது. நம் திருக்குறளை போல அளவில் சிறிதாய் இருந்துகொண்டு பெறிய பொருளை/கருத்தை உள்ளடக்கி யிருக்கும். ஒற்றை பச்சை மிளகாயை நச்சென்று கடித்ததை போல நறுக்கென்றும் இருக்கும், ஒரு நொடியை தன்னுள் உறைய வைத்துக்கொண்ட புகைபடத்தை போல பல செய்திகளை சொல்வதாயும் இருக்கும். இதுதான் ஹைக்கூ. வாழ்வை படிக்க வரும் மாணவனுக்காக ‘ஜென்’ (Zen) ஆசான்கள் வடிவமைத்த உருவு சிறுத்தாலும் காரம் குறையாத கடுகுகளே ஹைக்கூக்கள்.

எல்லாம் சரி, நம் தமிழ் புலவர்களும் ஹைக்கூ எழுதியிருக்கிறார்கள், அதுவும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே, என்றால் நம்புவீர்களா?

இன்றைய வடிவில் அல்ல என்றாலும், ஹைக்கூவிற்கான ‘நறுக்குத்தன்மை’ சிறிதும் குறையாத பாடல்கள் பல நம் சங்கவிலக்கியத்தில் உள்ளன. என் கண்களில் முதலில் பட்டது கீழ்வரும் இந்தப் புறநானூற்றுப் பாடல்தான்:

அதளெறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்மன்
ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே. (புறம் - 193 - ஓரேருழவர்)


பாட்டின் (ஹைக்கூ) பொருள் இதுதான்:

வேடன் துரத்தும் மானைப் போல
ஓடி பிழைத்துவிட முடியுமோ?
காலை தடுக்குமே வாழ்க்கை!


(தெளிவுரை, பதவுரையெல்லாம் வேண்டுமா? ‘நறுக்குத்தன்மை’யை கெடுத்துவிடுவானேன்!)

”ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே” என்ற வரிதான் என்னை மிகவும் கவர்ந்து, இப்பாடலில் பொதிந்துள்ள அந்த அழகிய ஆழமான ஹைக்கூச் சுவடை உணர்த்தியது! புலவர் எத்துனை நன்றாய் வாழ்க்கையின் இயல்பை புரிந்துகொண்டுள்ளார்?...