Showing posts with label காளமேகம். Show all posts
Showing posts with label காளமேகம். Show all posts

26 November, 2009

காளமேகம் - ககர கவிதை

வணக்கம் நண்பர்களே...

இன்று பாடல் என்ற பெயரில் பொருளற்ற சொற்களாலும் இரைச்சலான இசையாலும் கருத்தையும் காதையும் கிழிக்கும் பாடல்களோடு சிறிதும் ஒப்பிட இயலாத மீநுந்திறத்தோடு விளங்குபவை நம் தமிழ் இலக்கிய பாடல்கள்.

சொல்லால் பொருளால் பல திறங்களை காட்டிச்சென்றுளனர் நம் புலவர்கள், அவர்களுள் கவி காளமேகம் என்பார் ஓர் ஆசுகவி (எவ்வகை கவியும் விரைந்து பாடவல்லவர்) ஒரே எழுத்தின் வரிசையை வைத்தே பாடல்களை, அதுவும் வெண்பாக்களை, பாடியுள்ளார். அங்ஙணம் அவர் ‘ககர’ வரிசையில் பாடிய பாடலொன்றை கீழே தந்துள்ளேம்.

இதை படித்தபின் இன்றுலவும் சொற்கூளங்களை ”பாடல்” எனவும் மனம் வருமோ?

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.


காக்கைக்கா காகூகை [காக்கைக்கு ஆகா கூகை] - காகத்திற்கு கூகை (ஆந்தை) ஆகாது, இரவில் அது காக்கையை வெல்லும்
கூகைக்கா காகாக்கை [கூகைக்கு ஆகா காக்கை] - கூகைக்கு காகம் ஆகாது, பகலில் இது கூகையை வெல்லும்
கோக்குக்கூக் காக்கைக்குக் [கோக்கு கூ காக்கைக்கு] - கோ [மன்னன்] கூவை [உலகை/ நாட்டை] காக்க வேண்டுமாயின்
கொக்கொக்க [கொக்கு ஒக்க] - கொக்கை போல இருக்க வேண்டும், அஃதாவது கொக்கு தனக்கு இரையாக மீன் சிக்கும் வரை காத்திருப்பதை போல மன்னவன் சரியான நேரம் பார்த்து செயலாற்ற வேண்டும், அவ்வாறு இல்லையென்றால்,
கைக்கைக்கு காக்கைக்கு - கைக்கைக்கு [பகையிடமிருந்து] காப்பதற்கு
கைக்கைக்கா கா [கைக்கு ஐக்கு ஆகா] - ஐக்கு [தலைவனுக்கு] கைக்கு ஆகா [செய்ய இயலாது].


எப்படி...?