Showing posts with label கலவியல் கல்வி. Show all posts
Showing posts with label கலவியல் கல்வி. Show all posts

08 February, 2010

முத்தம் - காமத்துப்பாலும் கலவியல்கல்வியும்

கலவியல்கல்வி (sex education) தேவையா இல்லையா என்பது இன்னும் விவாதத்திற்குட்பட்ட ஒன்றாகவே இருக்கும் நிலையில் என் கருத்து தேவை என்பதே - அதையும் நம் பைந்தமிழ் இலக்கியங்கள் மூலம் தரவேண்டும் என்பது என் அவா!

அந்தவகையில் முதலில் நிற்கும் தகுதியுடையது திருவள்ளுவரின் காமத்துப்பாலே. இதன் குறள்களை எடுத்துக்கொண்டு அலசி ஆய்வதன் மூலம் கலவியலை கற்பிக்க முயலப்போகிறேன் (- ”என் கருத்து” என்ற வகையில் முழுச்சுதந்திரத்துடன் இதைச் செய்யப்போகிறேன் - சரி/தவறு என்று நீங்களும் அதே சுதந்திரத்துடன் கருத்துரையுங்கள்!)

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார். -திருக்குறள் 1289
”காமம் (காதல்) மலரைவிட மென்மையானது, சிலரே அதனை
நன்கு உணர்ந்து அதன் பயனை முழுதாய் துய்ப்பர்”

என்று வள்ளுவரே உரைப்பதற்கு ஏற்ப காதலின் நுண்மைகளை புரிய தலைப்படுவோம், தலையான புலவனின் வழி நின்று...

அழகான விதயத்துடன் துவங்கினால் அது கருத்தை ஈர்க்க உதவும் - காதலே அழகுதான், அதில் அழகு முத்தம் - ஆக முத்தத்திலிருந்தே துவங்கலாம்!

முத்தம் என்றவுடன் தெரிந்திருக்குமே என்ன குறள் என்று! அதேதான்,

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர். -திருக்குறள் 1121

“பணிவான மொழியைப் பேசும் இவளின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீரானது
பாலோடு தேனைக் கலந்ததைப் போன்று உள்ளது”

என்பது நேரிடைப் பொருள். இனி, இதை சற்றே ஆழ்ந்து அலசுவோம்...

காதலியின் சிறப்பை உரைக்கும் காதலனின் மொழியாய் அமைந்த இந்தக் குறள் முத்தத்தைப் பற்றிய ஒரு விரிவான கட்டுரைக்கு அடித்தளமாய் அமையக்கூடியது.

எந்தவொரு விதயத்தைப் பற்றியும் முழுதாய்அறிய வேண்டுமாயின், ‘என்ன’, ‘எப்படி’, ‘ஏன்’, ‘எவர்’, ‘எங்கு’, ‘எப்பொழுது’ என்ற ஆறு வினாக்களுக்கும்* விடைதேட வேண்டும் என்பது என் ஆசிரியர்கள் எனக்கு கற்பித்த முறை, இவை அனைத்திற்கும் நேரிடையாகவோ அன்றியோ விடையளித்து நிற்கிறது இக்குறள்! எவ்வாறு? முதலில் கேள்விகளை வரைத்துக்கொள்வோம் -

1. முத்தம் என்றால் என்ன?
2. எப்படி முத்தமிட வேண்டும்?
3. ஏன் முத்தமிட வேண்டும்?
4. எவரை முத்தமிட வேண்டும்?
5. எங்கு முத்தமிட வேண்டும்?
6. எப்பொழுது முத்தமிட வேண்டும்?

இனி விடைகளை அக்குறளில் தேடுவோம் -

1. முத்தம் என்றால் என்ன?

இது அன்பின் வெளிப்பாடு! ’காதற் சிறப்புரைத்தல்’ எனத்துவங்கிய வள்ளுவர் எடுத்தவுடன் முத்தத்தை புகழ்வதிலிருந்து காதலில் முத்தத்திற்குள்ள இடத்தைத் தெரிந்துகொள்ளலாம்! மேலும் அறிய 2ம் கேள்விக்கு செல்வோம்...

2. எப்படி முத்தமிட வேண்டும்?

பொதுவாய் ”வாயோடு வாய்” என்பதே காதலர்களுக்கான முத்தம் என்பது தெரிந்த விதயம் - ஆனால், அது உதடுகளின் உரசலாக மட்டும் இருந்துவிடக் கூடாது என்பது வள்ளுவர் வழி அறிகிறோம். உதடுகளைத் தாண்டிச் சென்று பற்களை நெருடிச்சுவைப்பதே ஆழமான முத்தம் - அதனால்தான் வள்ளுவர் ”வால் எயிறு ஊறிய நீர்” என்று எயிற்றை (பல்லைக்) குறிப்பிடுகிறார்! இன்றைய முத்த வல்லுனர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள்!

3. ஏன் முத்தமிட வேண்டும்?

இதற்கு இரண்டாய் விடையளிப்போம். ஒன்று, முத்தம் காதலர்களுக்குள் மேலும் இணக்கத்தை தருகிறது, பாலோடு தேன் கலந்ததைப் போன்ற சுவையை அளித்து தலைவன் - தலைவியை ஒருவர்பால் ஒருவரை கட்டுகிறது.

இரண்டு, முத்தம் மருத்துவ குணங்கள் வாய்ந்தது! ஆம்! முத்தம் தருகையில் நாம் நிறைய ‘கலோரிகளை’ எரிக்கிறோம், இரத்தவோட்டத்தை இதயத்துடிப்பை பெருக்குகிறோம், மிக மகிழ்ச்சியாய், உற்சாகமாய் இருக்கிறோம் - இவையெல்லாம் உடலுக்கு மிக நல்லவை.

வள்ளுவரின் “பாலொடு தேன்” உவமை இந்த இரண்டு பயன்களையுமே குறிப்பிடுகிறது என்பது வியப்பான செய்தி - பாலும் தேனும் சுவையானவை மட்டுமல்ல மருந்தாகவும் இருப்பவை! நம் சித்த மருத்துவத்தில் இவற்றிர்கு மிகமுக்கிய இடமுண்டு.

4. எவரை முத்தமிட வேண்டும்?

முத்தத்தைப் பற்றிய புரிதலில் இது மிக தேவையான ஒன்று - யாரை முத்தமிடுவது? கண்டவர்களையெல்லாம் முத்தமிட்டால் “பாலொடு தேன்” ஆகாது - சுவையில் ஆனாலும் மருத்துவ குணத்தில் ஆகாது! கண்டவர்களையும் முத்தமிடுங்கள் என்று சொன்னால் இது கலவியல் கல்வி ஆகாது! வரையரை வேண்டும்! தலைவன் தலைவியைதான் முத்தமிடுகிறான் - ஒருவனுக்கு ஒருத்தி என்று இருக்க வேண்டும்!

இதுபோக, “பணிமொழி” என வள்ளுவர் சொல்லியிருப்பதை காண்கையில். “எவர்” என்ற வினாவிற்கு அவர் மேலும் ஒரு விடையை தந்துள்ளார் என்று அறிகிறோம்! “பணிமொழி”களையே முத்தமிட வேண்டும் - பாலொடு தேன் கலந்தது போன்ற வாய்நீர் வேண்டுமென்றால்! ஆம், மென்மையாக பேசும் இயல்புடையவர்கள் தாங்களும் மென்மையானவர்களாய் இருப்பார்கள் (ஆண் பெண் இருபாலருக்கும் இது தகும்!) ”மலரினும் மெல்லிய” காதல் மெல்லியலாளர்களுடந்தானே இனிக்கும்? அதுபோக, இயல்பில் மென்மையாய் பேசுபவர்களின் வாய் அமைப்பும் (பற்களின் அமைப்பும்) சீராய் இருக்கும் என்பது தெளிவு - “வால் எயிறு” என்றதையும் நோக்குக - ஆக “பணிமொழி”களைதான் முத்தமிட வேண்டும்!

5. எங்கு முத்தமிட வேண்டும்?

இதற்கான விடை காதலர்களின் தன்மை (அவர்களது காதலின் படினிலை), அவர்களது சூழலின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தது - பொதுவாய் தனிமையில் இடுவது நலம்! இதை “களவியலின்” வழி அறிகிறோம்!

6. எப்பொழுது முத்தமிட வேண்டும்?

இவ்வினாவிற்கு நாம் இக்குறள் அமைந்த இடத்திலிருந்து பொருள் கொள்வோம். இக்குறள் “காதற் சிறப்பு உரைத்தல்” என்னும் அதிகாரத்தில் உள்ளது, இவ்வதிகாரம் ”தகையணங்குறுத்தல்” ”குறிப்பறிதல்” ”புணர்ச்சி மகிழ்தல்” “நலம் புனைந்து உரைத்தல்” ஆகியவற்றுக்குப்பின் முறையே வைக்கப்பட்டுள்ளது. இதன்வழி, காதலியை கண்டு, அவள் அழகில் மயங்கி (தகையணங்குறுத்தல்), அவளது குறிப்பை உணர்ந்து காதலை அறிந்து (குறிப்பறிதல்), அவளோடு சேர்ந்து கலக்கையில் (புணர்ச்சி மகிழ்தல்) அவளின் நலங்களை போற்றி அவளை நம்வழிப்படுத்திபின் (நலம் புனைந்து உரைத்தல்) அவளை முத்தமிட வேண்டும் என்று அறிகிறோம்.

ஆக, ஒரு குறளில் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளைவைத்து முத்தத்திற்கு இலக்கணம் நல்கியுள்ளார் ஐயர் வள்ளுவர்! இரண்டடி இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டு நிலைக்கிறது என்றால் சும்மாவா!

ஆதலினால் காதல் செய்வீர் - முத்தம் கொடுத்து நித்தம் மகிழ்வீர்!

*ஆங்கிலத்தில் இவற்றை ‘W5H' (What, When, Where, Who, Why, How) என்போம்!